வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஏற்படுத்திய சண்டை நிறுத்தத்திற்குப் பிறகும் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளைத் தாய்லாந்து ராணுவம் ஆக்கிரமித்துள்ளது என்று கம்போடியப் பிரதமர் ஹுன் மனெட் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) குற்றஞ்சாட்டியுள்ளார். பிரச்சினைக்குரிய எல்லைப் பகுதிகள் பற்றி விவாதிக்க இருநாட்டு எல்லை ஆணையத்தை பணியாற்ற அனுமதி வழங்குமாறு கம்போடியப் பிரதமர் தாய்லாந்தைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாரம் அமெரிக்கா அமைத்துள்ள அமைதிக் குழுவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றுள்ள கம்போடியப் பிரதமர் இக்கருத்துகளை ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தெரிவித்தார்.
மத்திய கிழக்கின் காஸா அமைதிக்காக அமெரிக்காவால் அமைக்கப்பட்ட அமைதிக் குழு, உலகப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண உதவலாம் என்று அதனை விரிவாக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் கம்போடியப் பிரதமர் அக்குழுவைச் சந்திக்கவுள்ளார்.
கம்போடியாவின் குற்றச்சாட்டை தாய்லாந்து மறுத்துள்ளது. சண்டை நிறுத்த உடன்பாட்டின்படியே அதன் ராணுவம் எல்லைப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தாய்லாந்து வலியுறுத்திவருகிறது.
தாய்லாந்து கம்போடிய சண்டையை தாம் நிறுத்திவைத்துள்ளதாக அதிபர் டிரம்ப் பெருமையாக விளம்பரப்படுத்திவரும் நிலையில் கம்போடியப் பிரதமரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சண்டை நிறுத்தம் எந்த நேரத்திலும் மீறப்படும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாழ 817 கிலோமீட்டர் நீளமுடைய இருநாட்டு எல்லைப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய ராணுவத் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

