அயில்ஷம், நார்ஃபொர்க்: அரசாங்க ரகசியங்களைப் பகிர்ந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் விண்ட்சர், வியாழக்கிழமை (பிப்ரவரி 19) மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தேம்ஸ் வேலியின் காவல்துறையினரால் அதிகாரபூர்வப் பணியில் தவறாக நடந்துகொண்டதற்காக விசாரிக்கப்பட்ட 66 வயது மவுன்ட்பேட்டன், அமெரிக்கப் பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் தொடர்பில் இருந்தவர்.
வர்த்தகப் பிரதிநிதியாக அவர் பணியாற்றியபோது அரசாங்க ஆவணங்களை அவர் ஜெஃப்ரியிடம் கைமாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
“ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் விண்ட்சர் அரசுப் பணியில் தவறாக நடந்துகொண்டது பற்றிய விவரங்களை அறிந்து மிகவும் கவலையடைகிறேன். ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்; அதிகாரிகளுக்கு எங்கள் குடும்பத்தின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும். சட்டம் அதன் கடமையைச் செய்யும்,” என்று பிரிட்டனின் அரசர் சார்ல்ஸ் அறிக்கை ஒன்றில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மறைந்த ராணி எலிசபெத்தின் இரண்டாம் மகனான ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகு, அனைத்து அரசப் பதவிகளையும் பட்டங்களையும் இழந்தார்.
தாம் எந்தக் குற்றமும் செய்யவில்லை என மறுக்கும் திரு மவுன்பேட்டன், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் வைத்திருந்த நட்பு குறித்து வேதனைப்படுவதாகக் கூறிவருகிறார்.

