நோம்பென்: இரு நாடுகளுக்கு இடையில் நீடிக்கும் எல்லைப் பூசல் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தாய்லாந்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்துள்ளது.
பல ஆண்டுகளாகத் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை உள்ளது. கடந்த ஆண்டு அது பெரிய பூசலாக உருவெடுத்தது. அதனால் இருதரப்புக்கும் இடையே எல்லை சண்டை நடந்தது. இதில் பலர் மாண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடமாறினர்.
இந்நிலையில், கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று, “இரண்டு நாடுகளும் விரைவில் ஒன்றாக இணைந்து பிரச்சினைக்குச் சுமுகமாகத் தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார்.
“ நீண்டநாள் அமைதிக்கு இது முதல் படியாக இருக்கும். மேலும் எல்லையில் வாழும் மக்கள் நிம்மதியாக வாழலாம். பேச்சுவார்த்தைக்கு கம்போடியா தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.
திரு ஹுன் தமது சமூக ஊடகப் பக்கத்தில் இது குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக், “தனது நாடு கம்போடியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடரத் தயாராக இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.
“பேச்சுவார்த்தை தொடர்பாகப் பேச கம்போடியாவுக்கு உரிமை உள்ளது. ஆனால் தாய்லாந்துக்கு எனச் சில விதிமுறைகள் உள்ளன, அவற்றைப் பின்பற்ற வேண்டும்,” என்று அமைச்சர் சிஹாசக் குறிப்பிட்டார்.
அண்மையில் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடந்தது. அதையடுத்து தற்போது புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் உள்ள எல்லை கிட்டத்தட்ட 800 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.
2025ஆம் ஆண்டு ஏற்பட்ட பூசல் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை நடந்தது. டிசம்பர் மாதத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இருப்பினும் இரு நாடுகளும் எல்லைத் தொடர்பாக அடிக்கடி குறைகூறி வருகின்றன. இதனால் பதற்றம் நீடிக்கிறது.

