திருச்சி: தமிழகம் முழுவதும் உள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்களைக் குறிவைத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) விடிய விடிய அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை, திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முக்கிய ஜவுளி நிறுவனங்களின் அலுவலகங்கள், கிளைகள், உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டப்படாத வருமானம், பரிவர்த்தனை முறைகேடு போன்ற புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சோதனையின்போது, கணினித் தரவுகள், முதலீடு தொடர்பான முக்கிய ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
“சோதனை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும்,” என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜவுளி நிறுவனங்களில் நடைபெற்று வரும் இந்தச் சோதனை தொழிலதிபர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

