பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பெண்கள் 50 மீட்டர் மூவகை (3-position) துப்பாக்கிச் சுடுதல் குழுப் பிரிவில் சிங்கப்பூர் தங்கம் வென்றுள்ளது.
மேலும், அடெல் டான், மடார்ட்டினா ஏமஸ், ஜேஸ்மின் செர் ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர்க் குழு புதன்கிழமை (டிசம்பர் 17) 1,717 புள்ளிகளை எடுத்து தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சாதனை படைத்தது.
மலேசியா வெள்ளிப் பதக்கத்தை வென்றது, வெண்கலம் தாய்லாந்துக்குச் சென்றது.
செர், 2009ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் அக்கிலா சுதிர், லிம் சியா ரோங் ஆகியோருடன் இணைந்து இப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பிறகு 2015 போட்டியில் செ;ங் ஜியென் ஹுவான், லி யா ஃபெய்யுடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஆனால், சிங்கப்பூர் தங்கப் பதக்கம் வெல்லாமலேயே இருந்து வந்தது.
புதன்கிழமை முன்னதாக பெண்கள் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் குழுப் போட்டியில் வெலோசோ, ஹோ சியூ யி, கான் சின் சென் ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர்க் குழு வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆண்கள் ‘ஷாட்கன் ஸ்கீட்’ (shotgun skeet) தனிநபர் பிரிவில் சிங்கப்பூரின் லோவ் ஜியாங் தங்கம் வென்றார். பெண்கள் ‘ஷாட்கன் டிராப்’ (shotgun trap) தனிநபர் பிரிவில் சிங்கப்பூர் வீராங்கனை சிட்டி மஸ்துரா ரஹீம் வெண்கலப் பதக்கம் வென்றார்.

