பயணப்பை தூக்கி வீசப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கோரியது சாட்ஸ் நிறுவனம்

பயணப்பை தூக்கி வீசப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கோரியது சாட்ஸ் நிறுவனம்

2 mins read
ஊழியரின் செயல் எங்களது சேவைத் தரத்திற்கு எதிரானது: சாட்ஸ் நிறுவனம்
e812f610-6aca-4958-a878-ab94c34fd278
நீலநிறச் சட்டை அணிந்த ஊழியர் ஒருவர் பயணப் பைகளை நகரும் பட்டையில் தூக்கி வீசியது காணொளியில் தெரிந்தது. - படங்கள்: இன்ஸ்டகிராம் / எரிக் யூங்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், ஊழியர் ஒருவர் பயணிகளின் உடைமைகளை மிகவும் அலட்சியமாகத் தூக்கிப் போட்டது தொடர்ந்தது காணொளி சமூக ஊடகங்களில் பரவி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 26) இணையத்தில் பகிரப்பட்ட அக்காணொளியில், நீல நிறச் சட்டை அணிந்த ஊழியர் ஒருவர் பெட்டிகளை நகரும் பட்டையில் (கன்வேயர் பெல்ட்) தூக்கிப் போட்டது பதிவாகியிருந்தது.

இந்தச் சம்பவத்திற்கு சாட்ஸ் (SATS) எனப்படும் சாங்கி விமான நிலைய தரைவழிச் சேவை நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட சாட்ஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட ஊழியரின் செயல் தங்களது சேவைத் தரத்திற்கு எதிரானது என்றும், உடைமைகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட ஒரு விமானத்தின் பயணிகளுடைய உடைமைகள் அவை என்பதும், மாற்று விமானங்களுக்காகக் குறைந்த கால அவகாசத்தில் அவற்றை ஏற்றியபோது இந்தச் சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.

பணிச்சுமை அதிகமாக இருந்தபோதிலும், இத்தகைய பொறுப்பற்ற செயலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிய நிறுவனம், சம்பந்தப்பட்ட ஊழியருக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அத்துடன், கூடுதல் மனிதவளம் தேவைப்படும்போது உதவி கோருமாறு ஊழியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும், இனிவரும் காலங்களில் சேவைத் தரம் குறையாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் சாட்ஸ் உறுதியளித்துள்ளது.

சம்பவம் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு நடந்ததாக இன்ஸ்டகிராமில் பதிவிட்ட எரிக் யோங் என்ற சமூக ஊடகப் பயனர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்