தெம்பனிஸ் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு (எம்ஆர்டி) அருகே வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) மாலை நிகழ்ந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
வெள்ளிக்கிழமை மாலை 5.55 மணியளவில் அப்பகுதியிலிருந்து பலமுறை அழைப்புகள் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது அங்கு, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் அந்த ஆடவருக்கு சிகிச்சையளித்ததைக் கண்டனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத, சம்பவத்தை நேரில் கண்ட ஆடவர் ஒருவர், வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியளவில் குடும்பத்துடன் அப்பகுதியில் இருந்தபோது வெள்ளை சட்டை அணிந்திருந்த ஆடவர் ஒருவர் உடலின் ஒரு பகுதியில் ரத்தக் கறை இருந்ததைக் கண்டதாகக் கூறினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை 1800-255-0000 என்ற எண்ணில் அழைத்தோ www.police.gov.sg/i-witness என்ற இணைய முகவரி வாயிலாகவோ தகவல் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

