வீவக வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம்

வீவக வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம்

1 mins read
e0cf1ed6-82df-420e-984b-ecedf3bd6885
ஈசூனின் சென்சாரு பகுதியில் உள்ள வீவக வேலையிடத்தில் பின்புறமாகச் செலுத்தப்பட்ட லாரி மோதியதில் 29 வயது வெளிநாட்டு ஊழியர் மாண்டார். - சித்திரிப்பு: பிக்சாபே
Google News Preferred Icon

ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வேலையிடத்தில் வெள்ளிக்கிழமை (மே 23) பங்ளாதேஷைச் சேர்ந்த 29 வயது ஊழியர் மாண்டார்.

பின்புறமாகச் செலுத்தப்பட்ட லாரி மோதியதில் அவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

71 லோரோங் சென்சாருவில் உள்ள வேலையிடத்தில் நில அளவைப் பணிகளில் அந்த ஆடவர் ஈடுபட்டிருந்ததாகவும் விபத்தையடுத்து காயங்களால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

சம்பவம் குறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த வீவக, ஆடவர் உயிரிழந்தது குறித்து வருந்துவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியது.

மாண்ட ஊழியரின் குடும்பத்தினருக்குத் தேவையான ஆதரவையும் உதவியையும் செய்வதில் அந்த வேலைத்திட்டக் குத்தகை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவிருப்பதாகவும் கழகம் குறிப்பிட்டது.

வேலையிடங்களில் பாதுகாப்புக்கு முக்கிய முன்னுரிமை தரப்படுவதாகவும் விசாரணையில் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பது குறித்து குத்தகை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அது சொன்னது.

கழகத்தின் வேலையிடங்கள் அனைத்திலும் வேலையிடப் பாதுகாப்பை வலுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடவிருப்பதாக வீவக கூறியது.

மேல்விவரங்களுக்கு மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை, சம்பவ இடத்தில் வேலை செய்யும் ஒப்பந்த நிறுவனம் ஆகிய தரப்புகளையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
லாரிஊழியர்உயிரிழப்புஈசூன்வெளிநாட்டு ஊழியர்பங்ளாதேஷ்