மசெக பிரசாரப் பொருள்களுக்குச் சேதம்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

மசெக பிரசாரப் பொருள்களுக்குச் சேதம்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
676a106c-c041-470c-afff-35a71db13a3f
சிங்கப்பூர்க் காவல்துறை, சேதமடைந்த மக்கள் செயல் கட்சி கொடிகளை ஆதாரத்துக்காகப் புகைப்படம் எடுத்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மே 3ஆம் தேதி இடம்பெற்ற வாக்களிப்பு நாளில் செய்த சில குற்றங்களுக்காக 57 வயது ஆடவர்மீது நீதிமன்றத்தில் ஜூலை 4ஆம் தேதி குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.

ஹவ்காங் அவென்யூ 5இல் ஓர் அரசியல் கட்சிக்குச் சொந்தமான பிரசாரப் பொருள்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஆடவர் எதிர்நோக்குகிறார்.

அவர் கட்சிக் கொடிகள் இருந்த கம்பங்களை உடைத்ததாகவும் பிரசார சுவரொட்டிகளைக் கிழித்ததாகவும் நம்பப்படுகிறது. அவை மக்கள் செயல் கட்சிக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த பகுதி ஹவ்காங் தனித்தொகுதிக்கு உட்பட்டது. அங்கு மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதித்து குற்றவியல் வழக்கறிஞர் மார்‌‌ஷல் லிம் பாட்டாளிக் கட்சியின் டென்னிஸ் டானுக்கு எதிராகப் போட்டியிட்டார்.

ஹவ்காங் தனித்தொகுதியில் பிரபலமான திரு டான் தொடர்ந்து இரண்டாவது தவணைக் காலத்துக்கு அங்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

மே 3ஆம் தேதி திரு லிம் பிடோக் அரங்கிற்கு வர தாமதமானது. அங்குத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து மக்கள் செயல் கட்சி ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்

ஹவ்காங்கில் உள்ள கட்சிக் கிளைக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடவர் வாகனத்தில் இருந்த கட்சிக் கொடிகளையும் சுவரொட்டிகளையும் கிழித்ததாகக் கூறப்படுகிறது. தொண்டூழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தாம் அங்கு இருந்ததாக அவர் சொன்னார்.

யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

கட்சித் தொண்டூழியர்களையும் ஆடவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர்களில் இருவரைத் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தின்போது ஆடவர் போதையில் இருந்ததாகவும் நம்பப்படுகிறது. அவர் பின் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்