உலக மொழிகளில் திருக்குறள்

உலக மொழிகளில் திருக்குறள்

2 mins read
9e732142-03fa-46c4-9cb2-85d137705b74
நூல்வெளியீட்டில் பங்கேற்றவர்கள். - படம்: கி. ஜனார்த்தனன்
Google News Preferred Icon

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளைப் பற்றிய ஆய்வுத் தொகுப்பு நூல் வெளியீடு வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 18) விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றது.

‘மாஸ்டர்ஸ் அகாடமி ஆஃப் ஸ்பீச் அண்ட் டிரெய்னிங்’, வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

வலைத்தமிழ் ஊடக அமைப்பின் நிறுவனர் ச.பார்த்தசாரதி, என்.வி.கே. அஷ்ராஃப், சி. ராஜேந்திரன், இளங்கோவன், செந்தில்செல்வன் துரைசாமி, அஜய் குமார் செல்வன் ஆகியோர் இந்த நூலை நான்கு ஆண்டு ஆய்வின் அடிப்படையில் எழுதியுள்ளனர்.

1595ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த முதல் திருக்குறள் மொழிபெயர்ப்பு முதல் 2022ல் வெளிவந்த நரிக்குறவர் மொழியான வாக்கிரி பூலி மொழிபெயர்ப்பு வரை, திருக்குறளை ஒட்டிய மொழிபெயர்ப்புகளைப் பற்றிய விவரப் பெட்டகமாக இந்நூல் உள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல், 200 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் வெளியீடு கண்ட இந்த நூல், வார இறுதியில் மலேசியாவிலும் வெளியீடு காணும். திருக்குறளை ஆராய முற்படுவோருக்கு இந்நூல் முக்கிய ஆவணமாகத் திகழும் என்று வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்புரை முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன் பாராட்டினார்.

முதன்முதலாக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் திருக்குறள் எனப் பகிர்ந்த முனைவர் செல்லக்கிருஷ்ணன், இதுபோன்ற பதிப்பாராய்ச்சி நூல்கள் தமிழ்மொழியில் குறைவு. மொழிபெயர்ப்பு பற்றிய முதல் ஆய்வு அடங்கல் நூலாக இது இருப்பதாகக் கூறினார்.

“எந்தப் பகுதிகள் மூல நூல், எவை இடைச்செருகல்கள் என இத்தகைய பதிப்பாய்வுகள் அடையாளப்படுத்த உதவுகின்றன,” என்றார் அவர்.

திருக்குறள் போற்றப்பட்டாலும் அதற்குரிய அங்கீகாரம் பெறப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், இனி யுனெஸ்கோவில் உலகப் பொது மரபு உடைய நூலாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற இலக்கையும் அந்த நூல் குறிப்பிட்டதை இவர் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ச. பார்த்தசாரதி, தரவு ஆய்வுத் துறையைச் சேர்ந்தவர் என்ற பின்புலத்தைக் கொண்டிருப்பதால் உண்மையின் அடிப்படையிலான தகவல்களே வளர்ச்சிக்கு உதவும் எனக் கருதி இதனைத் தயாரித்திருப்பதாகக் கூறினார்.

திருக்குறளின் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட உத்திகளும் இந்த நூலில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்