ஏமாற்றும் இணைப்புகள்: எச்சரிக்கையாக இருக்கவும்

ஏமாற்றும் இணைப்புகள்: எச்சரிக்கையாக இருக்கவும்

4 mins read
e7a477ca-d1eb-4664-a181-bbc6157d5e3e
இணையவழி தரவு திரட்டும் மோசடி. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

எச்சரிக்கையான நபராகத் தன்னை வருணித்தாலும் விதிமுறைகளைப் பின்பற்றும் பொறுப்பில் நிர்வாகியாகப் பணிபுரியும் 32 வயது எரிகா ஈவ்வுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு சோதனை.

விநியோக நிறுவனமான ‘டிஎச்எல்’ தமக்கு குறுஞ்செய்தி மூலம் தமது பொருளுக்கு சுங்க வரி கட்டணம் செலுத்துமாறு கூறியதைப் பார்த்து தமது ஆர்வம் மேலோங்க, கவனம் தப்பியது.

“அந்த நேரம் நான் உடற்பயிற்சி ஆடை ஒன்றை எதிர்பார்த்துகொண்டிருந்தேன்,” என்றார் அடிக்கடி இணையத்தில் பொருள் வாங்கும் பழக்கமுடைய ஈவ். சற்றும் தயங்காமல் அனுப்பப்பட்ட இணைப்பைச் சொடுக்கினார் அவர்.

முறையான ‘டிஎச்எல்’ நிறுவனத்தின் இணையப் பக்க முகப்புப் போலவே இருக்க, அவரது கடவுச்சொல், மறைச்சொல்லை உள்ளிடத் தொடங்கினார்.

“அந்த நேரத்தில்தான் இணையப்பக்க முகவரியைக் கண்டு இது அதிகாரபூர்வ இணையப் பக்க முகவரி போல இல்லையே என்று சுதாரித்தேன்,” என்றார் ஈவ்.

அந்த இணையப்பக்க முகவரியில் ஏதேதோ எழுத்துகளும் எண்களும் இருந்தன. மோசடி செய்யும் இணையப்பக்கத்தின் ஓர் அறிகுறி அது.

சந்தேகம் மேலோங்க, தமது உடற்பயிற்சி பொருளின் அதிகாரபூர்வ இணையப்பக்கத்தை நாடி அவர் வாங்கிய பொருளின் நிலை அறிய, அதில் தமது பொருள் இன்னும் வந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவருக்கு வந்த குறுஞ்செய்திக்கு மாறாக இருந்தது.

உடனே இணையத்தில் மேற்கொண்ட தேடலின் மூலம் அவரது சந்தேகம் நிரூபனமானது. அவரது கடவுச்சொல், மறைச்சொல்லை அறியும் முயற்சிதான் அது என்பது உறுதிசெய்யப்பட்டது.

மனநிம்மதி பெற்றாலும் தாம் இன்னும் விழிப்புடன் இருந்திருக்கலாமே என்பது அவரது எண்ணம். “ஆனால் அந்த இணையப்பக்கம் உண்மையானது போலவே இருந்தது,” என்றார் ஈவ்.

உயரும் மோசடிகள்

இணையவழி தரவு திரட்டி மோசடி செய்வோரிடம் சிக்கும் வயதினர் குழுவில் ஈவும் ஒருவர். பணத்தையோ தரவுகளையோ மோசடிக்காரர்கள் குறிவைக்கின்றனர்.

சென்ற மாதம் சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட மோசடிகள், இணையக் குற்றங்கள் அறிக்கை 2023ல் அந்த ஆண்டின் மொத்த இணையவழி தரவு திரட்டி மோசடி செய்யும் கும்பலில் சிக்குவோரில் 47.8% 30கும் 49 வயதுக்கும் இடைப்பட்டோர் என தெரிவிக்கப்பட்டது. இந்த மோசடிகளில் ஆக அதிகம் இந்த வயதுக்குட்பட்டோரே.

“அதிகரித்துவரும் மின்னிலக்கமாதலால் இந்த வயதுப் பிரிவினர் அதிக நேரம் இணையத்தில், குறிப்பாக பொருள்கள் வாங்கவும் வங்கி தொடர்பான வேலை, நண்பர்களுடன் இணைவது போன்றவற்றை செய்கின்றனர். இது மோசடி உட்பட இணைய அச்சுறுத்தலுக்கான வாய்ப்புகளை அவர்களுக்கு அதிகமாக்கிறது” என்றார் சிங்கப்பூர் காவல்துறையின் செயலாக்கப் பிரிவின் மோசடி பொதுக் கல்வி அலுவலகத்தின் துணை இயக்குநர் திரு ஜெஃப்ரி சின். இருந்தாலும் அனைவருமே மோசடிக்கு உள்ளாகக்கூடும் சாத்தியம் இருப்பதாக அவர் அறிவுறுத்தினார்.

இணையவழி தரவு திரட்டி மோசடி செய்வது அனைத்து வயதினர் மத்தியிலும் முன்னணி மோசடிகளில் ஒன்றாக சென்ற ஆண்டு இருந்தது.

அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து மின்னஞ்சல், குறுஞ்செய்தி, அழைப்புகள் வந்து தாமதக் கட்டணம், குற்றத்திற்கான அபராதம், பொருள் வாங்குவது என வெவ்வேறு ஆள்மாறாட்ட வகைகளில் மோசடிக்காரர்கள் அணுகுவார்கள்.

போலி இணையத்தளத்திற்கான இணைப்பை வழங்கி அந்தரங்க தரவுகளைப் பெற முனைவர்.

வங்கி, கடன்பற்று அட்டை விவரம் போன்றவைத் தவிர உங்கள் சமூக ஊடகக் கணக்குகளுக்குள் நுழைய கடவுச்சொல், மறைச்சொல் போன்ற விவரங்களையும் பெற முயற்சிப்பார்கள், என்று திரு சின் எச்சரித்தார்.

“அதன் பிறகு மோசடியில் சிக்குபவரைப் போன்று நடித்து, பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள், உறவினர்கள், வர்த்தகத் தொடர்புகள் போல ஆள்மாறாட்டம் செய்து கடன்பெறுவது போல பணம் பெற முயற்சிப்பர்,” என்றார் அவர்.

“இதற்காகத் தான் தொடர்புத் தளங்கள், சமூக ஊடகக் கணக்குகளுக்கெல்லாம் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்திக்கொள்ளவேண்டும். மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இது ஓர் வழி,” என்றார் அவர்.

மோசடிகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன

மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை 2023ல் 46.8 விழுக்காடு அதிகரித்து 46,563ஆக பதிவானதாக காவல்துறை பதிவுகள் காட்டுகின்றன. அதற்கு முந்தைய ஆண்டு அந்த எண்ணிக்கை 31,728ஆக பதிவாகி இருந்தது.

எண்ணிக்கை அதிகரித்தாலும் இழந்த பணத்தின் மதிப்பு 2022ல் இருந்த $660.7 மில்லியனிலிருந்து சற்று குறைவாக 2023ல் $651.8 மில்லியனாகவே பதிவாகியிருந்தது.

மோசடிகளில் இழந்த தொகையின் மொத்த மதிப்பு ஐந்தாண்டுகளில் முதன்முறையாகக் குறைந்திருந்தாலும், அது இன்னும் கணிசமாகவே இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இணையவழி தரவு திரட்டும் மோசடிகளை எதிர்க்க மூன்று வழிமுறைகள்

பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்கேம்ஷீல்டு தற்காப்பு செயலியை சேர்த்துக்கொள்ளுங்கள்

ஸ்கேம்ஷீல்டு செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, பாதுகாப்பு அரணாக, 2 அம்ச அல்லது பல நிலைகளுக்கான உறுதிப்பாடுகளை வங்கிச் செயலிகளுக்கும், சமூக ஊடக சிங்பாஸ் கணக்குகளுக்கும் முறையாக அமைத்துக்கொள்ளுங்கள். பேலா (PayLah),பேநவ் (PayNow), உட்பட்ட இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்கு உச்ச வரம்பை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.

அதிகாரத்துவ வழிகளில் மோசடிக்கான அறிகுறிகளை சோதித்துக்கொள்ளுங்கள்

ஸ்கேம்ஷீல்டு வாட்ஸ்அப் போட் செயலியை go.gov.sg/scamshield-bot மூலம் பயன்படுத்துங்கள். மோசடித் தடுப்பு நேரடி உதவி எண் 1800-722-6688 அலுவலக நேரத்தில் அழையுங்கள். அல்லது scamalert.sg இணையத்தளத்தை நாடுங்கள். அதிகாரபூர்வ தளங்கள் வழி வழங்கப்படும் வேலை குறித்த நம்பகத்தன்மையை உறுதி செய்யவும். குறைந்த முயற்சிக்கு அதிக பணம் தருவதும் முதலில் பணம் கேட்கும் வேலை வாய்ப்புகளும் பெரும்பாலும் மோசடிகளாகத்தான் இருக்கும். 

அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லுங்கள்:

மோசடிகளில் சிக்கியிருந்தால் உடனே காவல் துறையிடம் புகார் அளித்துவிடுங்கள். சமூக ஊடகத்தில் உருவாக்கப்பட்ட சந்தேகப்படும் கணக்குகளையும் பின்னணிக் குறிப்புகளையும் தவிர்த்து முடக்கிவிடுங்கள். நடந்த விவரங்களை குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேசிய குற்றத் தடுப்பு மன்றம் ஏற்படுத்தியிருக்கும் மோசடிக்கான வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து மோசடிக்கு எதிராக வழங்கப்படும் ஆலோசனைகளை அறிந்துகொள்ளுங்கள். 

சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது

குறிப்புச் சொற்கள்
மோசடிநிதி மோசடிதரவுகாவல்துறைஇணையக் குற்றம்இணையத்தளம்