மாபெரும் திறப்புவிழா கண்ட அயோத்தி ராமர் கோயில்

மாபெரும் திறப்புவிழா கண்ட அயோத்தி ராமர் கோயில்

3 mins read
fc42c09b-709c-48cb-ad5b-f29db68443ea
அயோத்தியில் குடிகொண்ட குழந்தை ராமர். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 3
Google News Preferred Icon

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ராமர் திங்கட்கிழமை எழுந்தருளினார்.

மஞ்சள், சிவப்பு நிறப் பட்டாடையில் கையில் தங்கத்தாலான வில், அம்புடன், வண்ண மலர் மாலைகளும் தங்க நகைகளும் பூண்டு கண்கொள்ள அலங்காரத்துடன் காட்சியளிக்கும் பால ராமர் கருவறையில் நிர்மாணிக்கப்பட்டு, கண் திறக்கப்பட்டதை மில்லியன் கணக்கான மக்கள் நேரிலும் நேரலையிலும் கண்டு மகிழ்ந்தனர்.

ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கிய நிகழ்வான பால ராமர் நிறுவப்படுதல் திங்கட்கிழமை இந்திய நேரப்படி நண்பகல் 12.29.08 வினாடிக்கு 121 வேதகர்கள் வேத மந்திரம் முழங்க நடைபெற்றது. 

சரியாக 84 வினாடிகளில் 51 அங்குலம் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை அயோத்தி கோயில் கருவறையில் நிர்மாணிக்கப்பட்டார்.

திட்டமிட்டபடி பிராண பிரதிஷ்டை விழா சடங்குகள் தொடங்கி நடைபெற்றன. அயோத்தியில் குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டு, கண் திறந்துவைக்கப்பட்டது.

குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் தாமரை மலர்களைத் தூவி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார்.

ராம்.. ராம்.. என்ற உணர்ச்சி பொங்க மக்கள் கோஷமிட்டு குழந்தை ராமரைப் பிரார்த்தனை செய்தனர். 

11 நாள் விரதமிருந்து பால ராமருக்கு பூசை செய்த பிரதமர் மோடி.
11 நாள் விரதமிருந்து பால ராமருக்கு பூசை செய்த பிரதமர் மோடி. - படம்: இபிஏ

பூசைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று செய்தார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

பிரதிஷ்டைக்கு முன்பு, புஷ்பம், பழம், மூலிகைகளைக் கொண்டு பால ராமருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் முற்றம் 81 கலச மூலிகை நீரால் தூய்மைப்படுத்தப்பட்டது. பிறகு, பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 125 கலச புனித நீர் சிலை மீது ஊற்றப்பட்டது. அதன் பிறகு மகாபூஜை நடத்தி உரிய இடத்தில் சிலை நிறுவப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக தெய்வீக ஆற்றல், பிராணன் சிலைக்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்வானது, மந்திரங்கள் ஓதப்படுவதன் மூலமாகவும் முத்திரைகள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டது.

அயோத்தியா கோயிலில் கூடிய பக்தர் கூட்டம்.
அயோத்தியா கோயிலில் கூடிய பக்தர் கூட்டம். - படம்: ஏஎஃப்பி

இந்த நிகழ்வின்போது அயோத்தி கோயில் மீதும், அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீதும் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டது.

4.25 அடி உயரம் கொண்ட பால ராமர் சிலையின் அகலம் 3 அடி. மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது. ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன.

இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரமெங்கும் வண்ணத் தோரணங்களாலும் மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிப்பட்டுள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் அயோத்தி வந்துள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ராமனை தரிசிக்க வந்துள்ளனர். உ.பி.யில் திங்கட்கிழமை 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்