கெஜ்ரிவாலை எதிர்த்து அதிகமான வேட்பாளர்கள் போட்டி

கெஜ்ரிவாலை எதிர்த்து அதிகமான வேட்பாளர்கள் போட்டி

2 mins read
69b6e67f-bf50-49eb-b3f1-5147ca73779f
2020 தேர்தலிலும் அதிகமான வேட்பாளர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகக் களமிறங்கினர். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: புதுடெல்லி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 981 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு இறுதியாக 719 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த முறையும் அவரை எதிர்த்து 28 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அந்த அளவுக்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டது அவரது தொகுதியில்தான். அத்தனை பேரையும் தோற்கடித்து கெஜ்ரிவால் வென்று முதல்வர் பதவியில் அமர்ந்தார்.

டெல்லி முன்னாள் முதல்வர்களின் வாரிசுகள் இருவரும் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா பாஜக சார்பிலும் மற்றொரு முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் காங்கிரஸ் சார்பிலும் கெஜ்ரிவாலுக்கு எதிராக களத்தில் உள்ளனர்.

ஆம் ஆத்மி உருவெடுக்கும் முன்னர், டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து வந்த காங்கிரஸ், கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஒரு தொகுதியில்கூட வெல்ல இயலாத அளவுக்கு அந்தக் கட்சி பலவீனமடைந்தது.

ஆகக் கடைசியாக, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளையும் பாஜக எட் இடங்களையும் கைப்பற்றின.

குறிப்புச் சொற்கள்