‘தமிழில் யோசி! தமிழில் வாசி!’

‘தமிழில் யோசி! தமிழில் வாசி!’

3 mins read
26d0a939-9a2f-4f55-9d8e-9639ddc60d3c
வசந்தம் ஒளிவழியில் செய்தி வாசிக்கும் படைப்பாளர்கள் மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பையும் செய்தி படைத்தலையும் போதித்தனர் - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தியின் நடப்பு விவகாரப் பிரிவு
Google News Preferred Icon

தமிழ்ச் செய்தியில் முக்கிய அம்சம் கொண்டுள்ளது மொழிபெயர்ப்பு. அதைக் குறித்து இளையர்களுக்கு முக்கிய தகவல்களைக் கொண்டு சேர்க்க மீடியாகார்ப் தமிழ்ச் செய்தியின் நடப்பு விவகாரப் பிரிவு ‘தமிழில் யோசி! தமிழில் வாசி!’ எனும் பயிலரங்கை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது.

செய்தியில் உபயோகப்படும் மொழிபெயர்ப்பு மூலம் இளையர்களுக்கு மொழியில் கூடுதல் புரிதல் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்ற பயிலரங்கில் கிட்டத்தட்ட 100 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

13 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

ஜூலை 15ஆம் தேதி நடந்தேறியது இந்த ஒரு நாள் மொழிபெயர்ப்புப் பயிலரங்கு. இதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் உள்ள நுணுக்கங்களும் தமிழ்ச் செய்தித் தயாரிப்பில் மொழிபெயர்ப்பு வகிக்கும் முக்கிய பங்கும் மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டன.

நிகழ்வுகளின் முக்கிய கூறுகளைத் தக்கவைத்து தகவல்களைத் துல்லியமாக பரிமாற்றும் திறன் முக்கியமான ஒன்று.

மொழியில் ஈடுபாடு குறைந்து வரும் காலத்தில் மொழித் திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துகொண்ட இளையர்களுக்கு குறிப்பிடப்பட்டது.

தொடர்பு, தகவல் அமைச்சு வழங்கும் ‘மொழிபெயர்ப்பில் சமூகம்’ நிகழ்ச்சி மானியத்தின் உதவியுடன் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் துணையுடன் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

“சுவாரசியமான நடவடிக்கைகளால் மொழிபெயர்ப்பை மிக எளிமையாக்கியது பயிலரங்கு. தமிழில் செய்தி வழங்கும் ஊடகங்கள் மீது ஆர்வம் கூடியுள்ளது,” என கூறினார் 17 வயது ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி யூசுப் சௌதரி ஹர்லினா ஃபஜுலா.

“தமிழில் சிந்திக்க பயின்றது பயிலரங்கின் மூலம் கிடைத்த பெரும் பயன். பள்ளிப் பருவத்தை தாண்டி தமிழில் பேசுவது, வாசிப்பது போன்றவற்றை தொடர்ந்து தாய்மொழியுடன் பிணைப்பு கொண்டிருக்க உதவும் என்று புரிந்து கொண்டேன்,” என பகிர்ந்துகொண்டார் கான் எங் செங் உயர்நிலைப்பள்ளி மாணவர் முகமது முஸஃபர் குடுஸ், 14.

“’பாட்டுப் பாட வா’ என்ற தலைப்பில் அமைந்த விளையாட்டு அங்கம் மிகவும் பிடித்திருந்தது. எனது தன்னம்பிக்கையும் இந்த பயிலரங்கின் மூலம் கூடியுள்ளது. தமிழ் சார்ந்த வாழ்க்கைத் தொழில்களைத் தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது பயிலரங்கு,” என்று குறிப்பிட்டார் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவி ரவி கீதா திவிஜா, 16.

“வார்த்தைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றுவது என்பது மொழிபெயர்ப்பு இல்லை. அர்த்தம் தவறாது மொழிபெயர்ப்பது மிகமுக்கியம். தாய்மொழியில் சிந்தித்தால் மட்டுமே மொழி, கலாசாரத்தின் அழகை உணர முடியும்,” என குறிப்பிட்டார் மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவின் தலைமை பதிப்பாசிரியர் திரு நா. குணாளன்.

பயிலரங்கில் இடம்பெற்ற போட்டியின் 4 வெற்றியாளர்களுக்கு வசந்தம் ஒளிவழியின் செய்தியில் வாசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவி வடிவேலு பவித்ரா, 14, “எவ்வாறு செய்தி வாசிக்க வேண்டும் என்பதற்கான திறன்களைக் கற்றுக்கொண்டேன். வசந்தம் ஒளிவழியின் செய்தி நிகழ்ச்சியில் செய்தி வாசிக்கும் வாய்ப்பை வென்றது மிகப் பெருமையாக இருந்தது. தொலைக்காட்சியில் நான் செய்தி வாசித்ததை பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.

“வசந்தம் ஒளிவழியில் செய்தி வாசித்தது இன்னும் நம்ப முடியாத அனுபவமாக இருக்கிறது. செய்தி நிகழ்ச்சியின்போது திரைக்குப் பின் நிகழும் செயல்முறைகளை அறிந்துகொண்டு வியந்தேன்,” என்றார் மிலெனியா கல்விநிலைய மாணவி அன்விதா விஜய் ஆனந்த், 16.  

சிறந்த 10 மாணவர்களின் மொழிபெயர்க்கப்பட்ட செய்திகள் செய்தியின் மின்னிலக்க தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.

வசந்தம் ஒளிவழியில் செய்தி வாசிக்கும் படைப்பாளர்கள் மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பையும் செய்தி படைத்தலையும் கற்றுக்கொடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்
செய்தி