இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகளை அனுப்பியுள்ளது அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகளை அனுப்பியுள்ளது அமெரிக்கா

2 mins read
94f24f49-923a-4fff-b94e-984bdab05703
இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து, இடிபாடுகளில் நடந்துசெல்லும் பாலஸ்தீனச் சிறுவன். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: காஸாவில் அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து, பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு அதிக எண்ணிக்கையில் ஆயுதங்களை அனுப்பியுள்ளது.

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 10,000க்கும் அதிகமான 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளும் ஆயிரக்கணக்கான ‘ஹெல்ஃபையர்’ ஏவுகணைகளும் அவற்றில் அடங்கும்.

ஆயுத ஏற்றுமதியின் அண்மையப் பட்டியல் பற்றித் தெரிந்திருந்த இரண்டு அமெரிக்க அதிகாரிகள் அந்தத் தகவலைத் தெரிவித்தனர்.

அக்டோபர் மாதம் போர் தொடங்கியதிலிருந்து அண்மைய நாள்கள் வரை, அமெரிக்கா குறைந்தது 14,000 ‘எம்கே-84’ 2,000 பவுண்ட் வெடிகுண்டுகள், 6,500 500-பவுண்ட் வெடிகுண்டுகள், 3,000 ‘ஹெல்ஃபையர்’ ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்பியுள்ளதாக, அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது இடத்தில் பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அந்த ஏற்றுமதிகளுக்கான கால அட்டவணையை அவர்கள் தெரிவிக்காதபோதும், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ராணுவ ஆதரவு குறையவில்லை என்று ஒட்டுமொத்த எண்ணிக்கையிலிருந்து தெரிகிறது.

ஆயுத விநியோகத்தைக் கட்டுப்படுத்த அனைத்துலக அளவில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மோசமான வெடிகுண்டுகளின் ஏற்றுமதியை நிறுத்த, அண்மையில் நிர்வாக முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டது.

காஸாவில் கடந்த எட்டு மாதக் கால கடும் ராணுவப் போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட விநியோகங்களைத் திரும்பி நிரப்ப இஸ்ரேலுக்குத் தேவைப்படும் அளவு, அந்த ஏற்றுமதிகளின் அளவோடு ஒத்துப்போவதாகத் தெரிவதாய் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பெரும் பூசலில், இந்த எண்ணிக்கையிலான ஆயுதங்கள் விரைவில் பயன்படுத்தப்படக்கூடும் என்றாலும், அந்தப் பட்டியல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா காட்டும் ஆதரவைப் பிரதிபலிப்பதாக, ஆயுத நிபுணர் டாம் காராக்கோ கூறினார்.

பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த ஆயுதங்கள், ஹமாசுக்கு எதிரான போராட்டத்தில் அல்லது ஹெஸ்புல்லாவுடனான உத்தேசப் பூசலில் இஸ்ரேல் பயன்படுத்தக்கூடியவை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஆயுதங்கள்இஸ்‌ரேல்