தாய்லாந்தில் சுற்றுலா நுழைவுக் கட்டணம் விரைவில் அறிமுகம்

தாய்லாந்தில் சுற்றுலா நுழைவுக் கட்டணம் விரைவில் அறிமுகம்

1 mins read
5a20e3d6-0819-4afa-bcca-9841ef924cae
விமானம் மூலம் தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு 300 பாட் கட்டணமாக விதிக்கப்படும். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பேங்காக்: தாய்லாந்தில் அண்மையில் பதவியேற்ற அனுட்டின் அரசாங்கம், அந்நாட்டிற்கு வரும் சுற்றுப்பயணிகளிடம் சுற்றுலா நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் வரி வசூலிக்கும் திட்டத்தை விரைவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

அதற்கான முன்மொழிவு, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சமர்ப்பிக்கப்படும் என அந்நாட்டுத் துணைப் பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான பிபட் ரட்சகிட்பிரகார்ன் உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் மூலம் தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு 300 பாட் (கிட்டத்தட்ட 11.70 சிங்கப்பூர் வெள்ளி) நுழைவுக் கட்டணமாக விதிக்கப்படும்.

நிலம், கடல் எல்லைகள் வழியாக வருபவர்களுக்கு 150 பாட் கட்டணம் விதிக்கும் திட்டங்கள் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

நிலம் வழியாக வருவோர்க்கு வரி விதிப்பது, தினமும் வேலைக்காகவும் ஒரு நாள் பயணமாகவும் தாய்லாந்துக்குள் வருவோர்க்குத் தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தற்போது அமல்படுத்தும் திட்டம் இல்லை எனத் திரு பிபட் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் கண்ணோட்டத்தில் இக்கட்டணத்தைப் நேர்மறையானதாக மாற்ற, தற்போதைய பெயருக்குப் பதிலாக வரவேற்கத்தக்க, இனிமையான புதிய பெயரைச் சூட்டவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்