நகைக்கடையில் 1 மில்லியன் வெள்ளி வைரத்தை விழுங்கிய திருடன்

நகைக்கடையில் 1 மில்லியன் வெள்ளி வைரத்தை விழுங்கிய திருடன்

1 mins read
262f031c-bf63-4da2-8c09-aa402435b47e
ஊடுகதிர்ப் பரிசோதனையில் வயிற்றுக்குள் நகை இருந்தது தெளிவாகத் தெரிந்தது.  - படம்: ஓர்லாண்டோ காவல்துறை
Google News Preferred Icon

நியூயார்க்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான நகைக் கடையில் திருடன் ஒருவன் 1 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள வைரத்தை விழுங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருட்டுச் சம்பவம் பிப்ரவரி 26ஆம் தேதி ஓர்லாண்டோவின் மில்லேனியாவில் உள்ள கடைத்தொகுதியில் இருக்கும் டிஃபேனியில் (Tiffany) நடந்தது.

ஜேதன் கில்டர் என்ற அந்த 32 வயது ஆடவர் தான் ‘ஓர்லாண்டோ மேஜிக்’ (Orlando Magic) கூடைப்பந்து அணியில் விளையாடும் வீரரைப் பிரதிநிதித்து வந்துள்ளதாக தெரிவித்தார்.

அதைக் கேட்ட கடை ஊழியர்கள் அந்த ஆடவரைச் செல்வாக்கு உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ‘விஐபி’ அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ஜேதனிடம் விலை உயர்ந்த நகைகள் காட்டப்பட்டன. சிறிது நேரத்தில் திடீரென தன்முன் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு ஜேதன் தப்பி ஓடினார்.

கடை ஊழியர்கள் அவரை மறித்து ஒரு நகையைப் பத்திரமாக மீட்டனர். இருப்பினும், ஊழியர்களை ஏமாற்றி வைரத் தோடுடன் ஜேதன் தப்பிச்சென்றார்.

அதன்பின்னர் காவல்துறை அதிகாரிகள் அவரைத் தேடிக் கண்டுபிடித்தனர். அதிகாரிகளிடம் சிக்கியபோது ஜேதன் சில நகைகளை விழுங்கினார்.

பின்னர் அவர் ஊடுகதிர் ( X-ray) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவரது வயிற்றுப்பகுதியில் நகை இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

ஆடவர் தற்போது விசாரணையில் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திருடன்வைரம்அமெரிக்கா