பிட்டாவுக்குக் கடைசிநேர நெருக்குதல்

பிட்டாவுக்குக் கடைசிநேர நெருக்குதல்

1 mins read
528839f3-2c31-4502-9df1-b2190f359a09
தாய்லாந்து நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கான நேற்றைய வாக்களிப்பு அமர்வின்போது கையசைக்கும் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சித் தலைவர் பிட்டா லிம்ஜாரோன்ராட். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

அடுத்த பிரதமர் யார் என்பதைத் தேர்வுசெய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்புடன் தாய்லாந்தில் இன்று நாடாளுமன்ற அமர்வு தொடங்கியது. பிரதமர் பதவிக்காக போட்டியிடும் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சித் தலைவர் பிட்டா லிம்ஜாரோன்ராட், கடைசி நேரத்தில் பல தடைகளைத் தாண்டி தாம் வெல்லப்போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிட்டாவின் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியின் தலைமையிலான கூட்டணி, சீராகச் செயல்பட்டுவரும் கட்சிகளுக்கும் ராணுவத்துடன் கூட்டு சேர்ந்த கட்சிகளுக்கும் எதிராகப் போட்டியிடவுள்ளது. 

இதற்கிடையே நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படும் மிரட்டலுடன் நாட்டின் மன்னராட்சியைத் தோற்கடிக்கும் முயற்சியில் பிட்டாவும் அவரின் கட்சியும் இறங்கியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை அரசியலமைப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

“மக்களின் ஆசைகளை நிறைவேற்றி அவர்கள் எனக்கு அளிக்கும் ஆதரவுக்கு ஏற்பச் செயல்படும் வகையில் என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்பதில் என்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்று நாடாளுமன்ற அமர்வுக்கு முன் செய்தியாளர்களிடம் திரு பிட்டா தெரிவித்தார்.

“என் தொலைநோக்குப் பார்வையை முடிந்தளவு உணர்த்தி, அனைத்து செனட்டர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிப்பேன்,” என்றார் அவர்.

நாடாளுமன்றப் பேச்சாளர் வான் முகம்மது நூர் மாத்தா நாடாளுமன்ற அமர்வைத் தொடங்கிவைத்து, வாக்கெடுப்புக்கு வருகைதந்த அரசியல்வாதிகளை வரவேற்றார்.

திரு பிட்டாவின் எட்டுக் கட்சிக் கூட்டணிக்கு 312 இடங்கள் இருந்தாலும் பிரதமர் ஆவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 376 இடங்கள் இருக்கவேண்டும்.

முன்னதாக, தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பிரயுத் சனோச்சா அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துபிரதமர்நாடாளுமன்றம்