ஜோகூர் கேளிக்கை விடுதியில் பிடிபட்ட பெண்கள்

ஜோகூர் கேளிக்கை விடுதியில் பிடிபட்ட பெண்கள்

1 mins read
b10e5257-aa10-4f39-83c7-a4184627413b
கேளிக்கை விடுதியில் கைதுசெய்யப்பட்ட பெண்கள். - படம்: மலாய் மெயில்
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: மலேசியாவின் இஸ்கந்தர் புத்ரி நகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் ஜோகூர் மாநிலக் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 44 வெளிநாட்டவர் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த வார இறுதிக்கு முன்பு அந்த கேளிக்கை விடுதியில் சோதனை நடத்தப்பட்டது. இரவுநேர கேளிக்கை விடுதிகளில் மேடை பொழுதுபோக்குப் படைப்புகளை வழங்கும் பெண்களைக் குறிவைத்து ‘ஆப்ஸ் கேகார்’ என்ற முறியடிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக இச்சோதனை நடத்தப்பட்டது.

பொதுமக்கள் அளித்த தகவல்களைக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15) நள்ளிரவுக்குப் பிறகு 12.10 மணிக்குச் சோதனை நடத்தப்பட்டதென ஜோகூர் குடிநுழைவுப் பிரிவு இயக்குநர் பகாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள் தகுந்த உரிமமின்றி மலேசியாவில் வேலை செய்வதுடன் தவறான செயல்களில் ஈடுபடுவதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததென்று திரு பகாருதீன் குறிப்பிட்டார். ‘ஃபிளவர் கேல்ஸ்’ என்றழைக்கப்படும் பொழுதுபோக்குப் பெண்களாகச் செயல்பட்ட 42 பெண்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் விவரித்தார்.

விசாரணையில் ஒத்துழைக்க சீனா, பங்ளாதே‌ஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆடவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாகுற்றம்