மலேசியாவில் குருப்பர் மீன்களுக்குத் தட்டுப்பாடு

மலேசியாவில் குருப்பர் மீன்களுக்குத் தட்டுப்பாடு

2 mins read
0d88469e-9272-4b93-8960-6a2f685711e9
குருப்பர் மீன்களுக்குத் தட்டுப்பாடு. - கோப்புப் படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

ஜார்ஜ் டவுன்: மலேசிய உணவங்களின் உணவுத் தட்டுகளை அலங்கரித்த ‘குருப்பர்’ மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பினாங்கில் வடக்கு செபராங் பிராயில் உள்ள ஒரு மீனவர் குழுவைப் பிரதிநிதிக்கும் மீனவரான அப்துல் காலித் அப்பாஸ், கடலில் செல்லும் மீன்பிடி படகுகளுக்கு மாலையில் வீசும் பலத்த காற்று ஆபத்தாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“பருவமழை காலத்தில் இருபது விழுக்காடு குறைவாக மீன் கிடைக்கும். இதனை உணவகங்களும் மீன் விற்பனையாளர்களும் அறிந்துள்ளனர்,” என்று அப்துல் காலித், 48, கூறினார்.

முன்னதாக கிளந்தான், திரங்கானு, பாகாங், ஜோகூர் மற்றும் மேற்கு சரவாக் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என மலேசிய வானிலை நிலையம் எச்சரித்திருந்தது.

வடகிழக்கு பருவநிலை காரணமாக நவம்பர் முதல் ஜனவரி வரை மழையிருக்கலாம் என்று அது கூறியிருந்தது.

‘எச்எல்ஒய் ஓஷன் அக்வாகல்சர்’ என்ற நிறுவனத்தின் பொது நிர்வாகியான ரிச்சர்ட் டியோ, 900 கிராம் மீன் குஞ்சுகள், 1.2 கிலோ எடை கொண்ட பெரிய மீன்களாக வளர பத்து மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகலாம் என்றார்.

“மற்ற மாதங்களைவிட சீனப் புத்தாண்டுக்கு அதிக தேவை இருக்கும் என்பதால் அதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. ஆண்டு இறுதியில் தேவையான அளவுக்கு மீன்கள் இருந்தாலும் அதிக நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் துரதிர்ஷ்டவசமாக தேவையை பூர்த்தி செய்ய முடியாது,” என்று குறிப்பிட்டார்.

செப்டம்பரில் ‘சிவப்பு நீர்’ தன்மை காரணமாக பண்ணையில் வளர்க்கப்பட்ட மீன்கள் இறந்துவிட்டதால் பினாங்கில் உள்ள மீன் பண்ணையாளர்கள் பெரும் நட்டத்தைச் சந்தித்தனர்.

திரு டியோவும் தனது பண்ணையில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதற்கு இப்போதே சீனப் புத்தாண்டு உணவுக்கான விசாரிப்புகள் வருவதாக அவர் கூறினார்.

“சீனப் புத்தாண்டுக்கு சிறப்பு உணவுத் தொகுப்பு இருக்கிறதா என்று சிலர் கேட்கின்றனர். அது பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அதற்கான பதிவுகள் விரைவில் முடிந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்,” என்று திரு டியோ சொன்னார்.

மற்றொரு மீனவரான டியோ டியோங் ஹாய், 43, பொருளியல் மெதுவடைந்ததால் உணவகங்கள் அதிக மீன்களை வாங்குவதில்லை என்று கூறுகிறார்.

இதற்கிடையே பினாங்கு கூ சூ குவோங் சூன் டோங் உணவகம் மற்றும் தேநீர் கடை சங்கத்தின் தலைவரான வினா யீ, சந்தையில் மீன் வரத்து குறைந்துவிட்டதாக சில உணவங்கள் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

முப்பது விழுக்காடு முதல் 40 வரை தட்டுப்பாட்டை எதிர்நோக்குகிறோம். தற்போது மீன் விநியோகம் சரளமாக இல்லை. குறிப்பாக ‘குருப்பர்’ போன்ற பிரபல மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகாவும் அவற்றின் விலை பத்து விழுக்காடு கூடிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியா