பிலிப்பீன்சில் நில அதிர்வு அச்சம்; முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள்

பிலிப்பீன்சில் நில அதிர்வு அச்சம்; முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள்

2 mins read
79aebb90-0e3b-4c55-8390-6317032655e1
சுரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் உள்ள ஹினாடுவானில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மணிலா: பிலிப்பீன்சில் நில நடுக்கத்திற்குப் பிந்திய நில அதிர்வுகளால் அச்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர்.

தெற்கு பிலிப்பீன்சில் நிலநடுக்கம் நிகழ்ந்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

“நாங்கள் நில அதிர்வுகளால் பயந்துபோயிருக்கிறோம்,” என்று சுரிகாவ் டெல் சுர் வட்டாரத்தின் பேரிடர் முகவையின் தலைவர் அலேக்ஸ் அரானா தெரிவித்துள்ளார்.

அவரது கடலோர மாகாணம் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளது. கடந்த சனிக்கிழமை 7.4 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் தாக்கியது. இதையடுத்து நில அதிர்வுகள் நிகழ்கின்றன.

நிலநடுக்கத்தில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவர், இடிபாடுகள் சரிந்து விழுந்ததால் பலியானார். மற்றவர் சுவர் இடிந்து மரணமடைந்தார். டாவோ டெல் நோர்டே மாகாணத்தில் மேலும் எட்டுப் பேர் காயம் அடைந்தனர்.

டாவோ டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள டாகும் நகரத்தில் வீட்டிலிருந்து குடும்பத்துடன் தப்பியோடியபோது கர்ப்பிணி பெண் ஒருவர் சுவர் இடிந்து உயிரிழந்தார்.

ஞாயிறு இரவு வரை சுரிகாவோ டெல் சுர் இடத்தில் உள்ள 115 முகாம்களில் 108,000க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர் என்று அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை அதிகாலையில் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் மின்டனாவோவைத் தாக்கியது. இது, 7.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் மற்றும் 1,700 நில அதிர்வுகளின் ஒரு பகுதி அல்ல என்று அதிகாரிகள் கூறினர்.

“நில அதிர்வுகளால் அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுகிறது. தற்போதைக்கு முகாமிலேயே தங்க விரும்புகிறோம்,” என்று சுர்காவோ டெல் சுர் மாகாணத்தில் உள்ள ஹினாடுவான் நகர குடியிருப்பாளரான சுசன் கிளோர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பீன்சில் நிலநடுக்கம் நிகழ்வது வழக்கமான ஒன்று. இது, பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள எரிமலைகளின் பாதையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி இங்கு நில அதிர்வு ஏற்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்நிலநடுக்கம்