வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் இருவரின் அன்புக்குரிய செல்லப்பிராணியான ‘கமாண்டர்’ எனும் நாய் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
‘ஜெர்மன் ஷெஃபர்ட்’ வகையைச் சேர்ந்த ‘கமாண்டர்’, 2021ஆம் ஆண்டு, குட்டியாக இருந்தபோது வெள்ளை மாளிகைக்குக் குடியேறியது. தற்போது அதற்கு இரண்டு வயது.
‘கமாண்டர்’, வெள்ளை மாளிகை ஊழியர்கள் சிலரைக் கடித்ததால், புதன்கிழமை (அக். 4) அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கூறினார்.
அதிபரின் ரகசியப் படைப் பிரிவு அதிகாரிகள் 11 பேரை அது கடித்ததாகக் கூறப்படுகிறது.
அதிபரும் அவர் மனைவியும் வெள்ளை மாளிகையில் வேலைபார்ப்போரின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோரின் பொறுமைக்கும் ஆதரவுக்கும் இருவரும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே ‘மேஜர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள நாயையும் இதே காரணத்துக்காக பைடன் தம்பதி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

