மஇகா - மக்கள் சக்தி கட்சிகளை ஒன்றிணைக்க செயலகம்

மஇகா - மக்கள் சக்தி கட்சிகளை ஒன்றிணைக்க செயலகம்

2 mins read
d876a622-6926-4902-9948-77d00c1488e9
மஇகா, மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் வெள்ளிக்கிழமை சந்திப்பு நடத்தினர். - படம்: மலேசிய ஊடகம்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: இந்திய சமூக மேம்பாட்டிற்காக மலேசிய இந்தியர் காங்கிரசும் (மஇகா) மலேசிய மக்கள் சக்தி கட்சியும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.

இரு கட்சியினரும் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து மஇகா தேசிய தலைவர் எஸ். ஏ. விக்னேஸ்வரனும் மலேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் ஆர். எஸ். தனேந்திரனும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்தியர்களின் நலனுக்கான மஇகாவும் மலேசிய மக்கள் சக்தி கட்சியும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. இதற்காக ஒரு செயலகம் விரைவில் அமைக்கப்படும் என்று விக்னேஸ்வரன் கூறினார்.

தனித் தனியாக செயல்பட்டு வந்தாலும் இந்திய சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் எனும் குறிக்கோள், இரு கட்சிகளுக்கும் ஒன்றாகவே உள்ளது. இதர இனக் கட்சிகளைப் போன்று இந்தியக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்ற விக்னேஸ்வரன், இணைந்து செயலாற்ற இந்திய சமுதாயத்தின் நலன் கருதும் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

நாட்டில் உள்ள இந்திய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையாகவும் இந்த சிறப்பு செயலகம் இருக்கலாம். இந்த செயலகம் தோற்றுவிப்பு தொடர்பிலான மேல்விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

மக்களின் ஒற்றுமைக்கு ஆதரவு அளிக்க இந்த ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுவதாக திரு தனேந்திரன் கூறினார்.

மலேசியாவில் சிறிய எண்ணிக்கையில் உள்ள இந்தியர்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் முன்னேறும் வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிடத் தேவையில்லை என்றும் தனேந்திரன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியா