மலேசிய மாமன்னர்: சொர்க்கத்திலிருந்து வந்த குழந்தை

மலேசிய மாமன்னர்: சொர்க்கத்திலிருந்து வந்த குழந்தை

1 mins read
a5b481fe-0389-49aa-99e8-510410b96426
குழந்தையுடன் மலேசிய மாமன்னர், அரசியார். - படம்: மலேசிய மாமன்னர் அரண்மனை
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தை ஒன்றுக்கு முகம் மற்றும் உடலின் மேல் பகுதியில் மிக அடர்த்தியாக, அளவுக்கு அதிகமான முடி உள்ளது. அதுமட்டுமல்லாது அதன் மூக்கில் துவாரங்கள் இல்லை.

சாதாரண குழந்தையின் தோற்றத்தைக் காட்டிலும் மாறுபட்ட தோற்றம் கொண்ட இந்தப் பெண் குழந்தை ‘சொர்க்கத்திலிருந்து வந்த குழந்தை’ என்று மலேசிய மாமன்னரும் அரசியாரும் வர்ணித்துள்ளனர்.

மாமன்னரும் அவரது துணைவியாரும் கிழக்கு மலேசியாவின் சாபா, சரவாக் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இம்மாதம் 10ஆம் தேதியன்று மாமன்னரையும் அரசியாரையும் காண இரண்டு வயது மிஸ்ஸெல்யென் ரோலண்ட் தமது பெற்றோருடன் காத்துக்கொண்டிருந்தார்.

சரவாக்கின் மிரி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் மாமன்னரையும் அரசியாரையும் காணத் திரண்ட நூற்றுக்கணக்கானவர்களில் அவர்களும் அடங்குவர்.

குழந்தை மிஸ்ஸெல்யெனுடன் மாமன்னரும் அரசியாரும் படமெடுத்துக்கொண்டனர்.

அக்குழந்தையைத் தூக்கி, கட்டியணைத்துக்கொண்டார்.

“ இந்தக் குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். இது சொர்க்கத்திலிருந்து வந்த குழந்தை, இறைவன் தந்த பரிசு,” என்று மாமன்னர் கூறியதாகக் குழந்தையின் தந்தை தெரிவித்தார்.

குழந்தையின் தோற்றம் மற்றவர்களைவிட மாறுபட்டதாக இருந்தாலும் அது ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அது மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதாகக் கூறப்படுகிறது.

தங்கள் குழந்தையின் வித்தியாசமான தோற்றம் காரணமாக பலர் தங்களை வெறுத்து ஒதுக்குவதாகக் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியா