ஜோகூர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மந்தம்

ஜோகூர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மந்தம்

1 mins read
738523fe-2c49-4451-938c-226228eeef85
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. - படம்: தி ஸ்டார் 
Google News Preferred Icon

கோலாலம்பூர்: ஜோகூரில் பூலாய், சிம்பாங் ஜெராம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை நடந்தது.

இரண்டு தொகுதிகளிலுமே வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை நாள் முழுவதும் குறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 46.8 விழுக்காட்டினர் வாக்களித்து இருந்தனர். சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியில் அந்த அளவு 60.2% ஆக இருந்தது என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

பூலாய் தொகுதியில் வாக்களிக்கப் பதிவு பெற்றிருந்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 166,653. அதேபோல, சிம்பாங் ஜெராம் தொகுதியில் மொத்தம் 40,488 பேர் பதிவு பெற்ற வாக்காளர்கள் இருந்தனர்.

பருவநிலை சரியில்லாததே வாக்களிப்பு குறைவாக இருந்ததற்குக் காரணம் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கனி சாலே கூறினார்.

பூலாய் தொகுதியில் அந்தத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள பக்கத்தான் ஹரப்பான் சார்பில் வேட்பாளர் சுகாய்சன் கயாட் களமிறங்கினார்.

அவரை எதிர்த்து பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளரும் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் களமிறங்கினர்.

சிம்பாங் ஜெராம் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளரும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளரும் எஸ். ஜெகன்நாதன் என்ற சுயேச்சை வேட்பாளரும் மோதினர்.

தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை இரவு வெளியாகவிருந்தன.

குறிப்புச் சொற்கள்
மலேசியா