ஜோகூர் முதலமைச்சர்: விரைவு ரயில் சேவைக்கு முக்கியத்துவம்

2 mins read
77b5741a-4909-438e-bf2b-b953a260eef4
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு நக­ரை­யும் அண்டை நாடான சிங்­கப்­பூ­ரை­யும் இணைக்­கும் விரைவு ரயில் சேவை இரு நாடு­க­ளுக்­கும் ஆக அதிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்று ஜோகூர் மாநில முத­ல­மைச்­சர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறி­யுள்­ளார். சிங்­கப்­பூ­ருக்கு மேற்­கொண்ட மூன்று நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணத்­தின் கடைசி நாளான நேற்று அவர் இவ்­வாறு சொன்­னார்.

"விரைவு ரயில் சேவை வர்த்­தக விவ­கா­ரங்­க­ளுக்கு மட்­டு­மின்றி சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான உறவை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் முக்­கி­ய­மா­னது," என்று திரு ஒன் ஹாஃபிஸ், ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்­டார். சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ர­னைச் சந்­தித்த பிறகு அவர் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டார்.

ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் விரைவு ரயில் சேவை கட்­ட­மைப்பை 2026ஆம் ஆண்­டி­று­திக்­குள் கட்டி­மு­டிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அந்த நான்கு கிலோ­மீட்­டர் ரயில் பாதை அமைக்­கப்­பட்ட பிறகு பய­ணி­கள் சிங்­கப்­பூ­ரின் உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தி­லி­ருந்து ஜோகூர் பாரு­வில் உள்ள புக்­கிட் சாகா­ருக்கு ஐந்து நிமி­டங்­களில் செல்­ல­லாம். திரும்பி வரு­வ­தற்­கும் அதே நேரம்­தான் ஆகும்.

விரைவு ரயி­லில் ஒரு மணி­நே­ரத்­தில் 10,000 பய­ணி­கள் வரை இந்­தப் பாதை­வழி பய­ணம் செய்­ய­லாம். விரைவு ரயில் சேவை, சிங்­கப்­பூ­ரின் உட்­லண்ட்ஸ் நார்த் பெரு­வி­ரைவு ரயில் நிலை­யத்­து­டன் இணைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

காஸ்வே கடற்­பா­லத்­தின் ஜோகூர் பாரு­வின் குடி­நு­ழைவு சோத­னைச் சாவ­டி­யில் மோட்­டார் சைக்­கிள்­க­ளுக்­கென கூடு­தல் சாலைத் தடங்­களை அமைப்­பது குறித்து ஜோகூர் மாநில அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் திரு ஒன் ஹாஃபிஸ் தெரி­வித்­தார். காஸ்வே பாலத்­தில் பயண நேரம், குடி­நு­ழைவுச் சோத­னைக்­கான நேரம் ஆகி­ய­வற்­றைக் குறைப்­பது அதன் இலக்கு.