கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அமெரிக்க மருத்துவர் மரணம்; விசாரணை

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அமெரிக்க மருத்துவர் மரணம்; விசாரணை

1 mins read
84557780-b24d-4b62-a8d1-58e26f8a6f6a
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், 'ஃபைசர்-பயோஎன்டெக்' தடுப்பூசியை போட்டுக்கொண்டு 16 நாட்கள் கழித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாக்டர் கிரெகரி மைக்கல் எனும் அந்த 56 வயது மகப்பேறு, மகளிர்நல மருத்துவர், கடந்த மாதம் 18ஆம் தேதி கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

பதினாறு நாட்கள் கழித்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிர் இழந்துவிட்டதாக அவரது மனைவி ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக 'ஃபைசர்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் அந்த மருத்துவரின் மரணத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக இப்போதைக்குத் தெரியவில்லை என்று அது கூறியது.

மனிதர்களிடம் தடுப்பூசியைச் செலுத்திப் பார்க்கும் பரிசோதனைக் கட்டத்தில் இதுபோன்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் கண்டறியப்படவில்லை என்று அந்நிறுவனம் விவரித்தது.

அமெரிக்காவில் இதுவரை 'ஃபைசர்-பயோஎன்டெக்' அல்லது 'மொடர்னா' தடுப்பூசிகளை ஏறத்தாழ ஒன்பது மில்லியன் பேர் போட்டுக்கொண்டனர். அந்நாட்டில் இதுவரை இவ்விரு தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட வேறு எவரும் உயிர் இழந்துவிட்டதாக இதுவரை தகவல் இல்லை.

கைவலி, சோர்வு, தலைவலி அல்லது காய்ச்சல் போன்ற சாதாரண பக்கவிளைவுகள் மட்டும் பலருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பக்கவிளைவுகள் தற்காலிகமானவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்