டாக்சியில் பிரசவம் பார்த்த பெண் போலிஸ்

டாக்சியில் பிரசவம் பார்த்த பெண் போலிஸ்

1 mins read
e94e51a9-f688-4e37-995c-d6f5277b00f5
(படம்: பெர்னாமா) -
Google News Preferred Icon

பணியில் இருந்த ஒரு பெண் போலிஸ் அதிகாரி, பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு உதவப்போய் டாக்சியில் பிரசவமும் பார்த்த சம்பவம் மலேசியாவில் திங்கட்கிழமை நடந்தது.

கோலாலம்பூரிலுள்ள பெர்செபாது செலாட்டான் பேருந்து முனையத்தின் போலிஸ் சாவடியில் வேலைபார்த்துக்கொண்டிருந்த 'லான்ஸ் கார்பரல்' என். கோமதி, 27, தம் கடமைக்கும் அப்பாற்பட்டு இவ்வாறு உதவி செய்திருந்தார். இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒரு பெண், பிரசவ வேதனையுடன் திருவாட்டி கோமதியை அணுகியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. உடனே அதிகாரி கோமதி, அந்தப் பெண்ணை அருகிலுள்ள டாக்சி நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்று அவருடன் டாக்சி ஒன்றில் ஏறிக்கொண்டார். அந்த டாக்சி மருத்துவமனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே குழந்தையின் தலை வெளியேறத் தொடங்கிவிட்டது. இதனால் திருவாட்டி கோமதி, வேறு வழியின்றி அந்த டாக்சியை நிறுத்திப் பிரசவம் பார்க்கவேண்டியிருந்தது.

திருவாட்டி கோமதிக்கு இதுவரை பிரசவம் பார்த்த அனுபவம் அறவே இல்லாவிட்டாலும் தம்மால் முடிந்த அளவு உதவி 3.7 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையை எந்தப் பிரச்சினையுமின்றி அந்தத் தாயார் பெற்றெடுக்க உதவி செய்தார். சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு இணையவாசிகள் திருவாட்டி கோமதி மீது பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரைச் சேர்ந்த திருவாட்டி கோமதி, 2016ஆம் ஆண்டு போலிஸ் படையில் சேர்ந்தார்.