படுக்கையறையில் கோலா கரடி; வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதிக்கு அதிர்ச்சி

படுக்கையறையில் கோலா கரடி; வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதிக்கு அதிர்ச்சி

1 mins read
b97274d9-0d17-4072-93c9-2a76af125b31
வேலை முடிந்து வீடு திரும்பிய அடிலெய்ட் நகரத் தம்பதி, படுக்கையறையில் அமர்ந்திருந்த கோலா கரடியைக் கண்டு அதிர்ந்தனர். - படங்கள்: ஃப்ரான் டியாஸ் ருஃபினோ/இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கின்றனர் புருன்னோ ருஃபினோ-ஃபிரான் டியாஸ் ருஃபினோ தம்பதியர்.

நவம்பர் 13ஆம் தேதி, வேலை முடிந்து பின்னிரவு 12.30 மணியளவில் வீடு திரும்பிய இருவருக்கும் காத்திருந்தது ஓர் அதிர்ச்சி.

அவர்களின் படுக்கையறைத் தரையில் ஒரு கோலா கரடி அமர்ந்திருந்தது.

இச்சம்பவம் குறித்து சிஎன்என் ஊடகத்திடம் பேசிய திருமதி ருஃபினோ, தங்களைப் பார்த்ததும் கட்டிலுக்கு அருகில் உள்ள மேசை மேல் ஏற முயன்ற கோலா அங்கிருந்து கட்டிலின் மேல் தாவியதாகக் கூறினார்.

“பயமாகவும் அதேநேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதை எப்படி வீட்டிலிருந்து வெளியேற்றுவது எனக் கவலையாகவும் இருந்தது,” என்றார் அவர்.

படுக்கையிலிருந்து கீழே தாவிய கோலா, வரவேற்பறை வழியாக ஓடி, பின்னர் திறந்திருந்த கதவு வழியாக வீட்டிலிருந்து வெளியேறியது.

தங்களை அது கடிக்க முயன்றதாகத் திருமதி ருஃபினோ குறிப்பிட்டார்.

செல்லப் பிராணிக்கான கதவு தாழிடப்படாததால் அதன் வழியாக வீட்டுக்குள் அந்தக் கோலா கரடி நுழைந்திருக்கக்கூடும் என்று கூறிய அவர், கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அது தங்கள் படுக்கையறையில் இருந்ததாகச் சொன்னார்.

பலமுறை தங்கள் குடியிருப்புப் பகுதியில் யூக்கலிப்டஸ் மரங்களின்மேல் கோலா கரடிகளைப் பார்ததுண்டு என்றார் அவர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்