கோலாலம்பூர்: மலேசியாவில் சென்ற மாதம் (2026 ஜனவரி), காதல் மோசடி தொடர்பில் 100 புகார்கள் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பாதிக்கப்பட்டோர்க்கு 3.5 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
மலேசிய வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ருஸ்டி முகமது இஸா இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
ஒப்புநோக்க, சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் 95 புகார்கள் அளிக்கப்பட்டன என்றார் அவர். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புகார்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதும் இழப்பின் மதிப்பு 27 விழுக்காடு குறைவு என்றார் திரு ருஸ்டி.
2025 ஜனவரியில் காதல் மோசடி மூலம் 4.9 மில்லியன் ரிங்கிட் இழப்பு பதிவானது.
“பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் (60 விழுக்காடு) பெண்கள்,” என்று கூறிய திரு ருஸ்டி, “காதல் மோசடிகளில் பாதிக்கப்பட்டோரில் 72 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
‘செமாக்மியூல்’ இணையவாசல் மூலம் வங்கிக் கணக்குகள் அல்லது தொலைபேசி எண்களைச் சரிபார்க்கும்படிப் பொதுமக்களுக்குத் திரு ருஸ்டி ஆலோசனை கூறினார்.

