வாஷிங்டன்: அமெரிக்காவின் தலைமையில் காஸாவின் மறுநிர்மானத்துக்குத் திரட்டப்படும் உலகளாவிய நிதி அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பாகவே ஈரானுடன் ஏற்பட்டுள்ள அணுவாயுதப் பூசல் அந்த முயற்சியைத் தடம்புரளச் செய்யும்.
இந்த அச்சத்தை வாஷிங்டனில் உள்ள மத்தியக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் டாக்டர் ஜேசன் கேம்பெல் வெளிப்படுத்தியுள்ளார்.
சமரசம் செய்யும் நாடுகளின் உதவியோடு, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் பேச்சுவார்த்தைகள் சிறிதளவு முன்னேற்றத்துடன் நடந்துவருகின்றன. இருப்பினும் அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் அணு ஆயுத உற்பத்தியை ஈரான் முழுவதும் நிறுத்துவதற்கும் ஏவுகணை தயாரிப்பை கட்டுப்படுத்தவும் நிபந்தனைகள் விதித்துள்ளது. அவற்றை ஈரான் ஏற்றுக்கொள்ளவது சாத்தியமில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
வட்டார நிலைத்தன்மைக்கு ஈரான் மிரட்டலாக உள்ளது என்று கூறிய அதிபர் டிரம்ப், அடுத்த 10 நாள்களில் தாம் அந்நாடு குறித்து முடிவெடுக்கப்போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மத்தியக் கிழக்கில் உள்ள ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா அதிகரித்துள்ளது. இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்களுடன் பல போர்க் கப்பல்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. ஈரானில் தாக்கப்படக்கூடிய இலக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் இவற்றுக்கெல்லாம் சளைத்துவிடாமல், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. முக்கியக் கப்பல் வர்த்தகப் பாதைகளிலும் ஹொர்முஸ் வளைகுடா பகுதியிலும் பயிற்சிகள் நடந்துவருகின்றன.
இஸ்ரேல், அரேபியக் கடல்பகுதி, எரிசக்தி கட்டமைப்புகள் என அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள மத்தியக் கிழக்கு நாடுகளை ஈரான் குறிவைத்துள்ளது. ஆகவே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் போர் மூண்டால் காஸாவின் அமைதித் திட்டம் சீர்குலைந்துவிடும் என்று டாக்டர் ஜேசன் கூறினார்.
காஸா அமைதிக் குழுவில் உள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ருபியோ, தூதர்கள் ஸ்டீவ் விட்கோவ், ஜாரட் குஷ்னர் ஆகியோர் ஈரானுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றனர். எனவே, போர் மூளும் சூழலில் அவர்களின் காஸா அமைதி முயற்சியில் தடை ஏற்படுவது இயல்பானது என்று டாக்டர் ஜேசன் விளக்கினார்.

