கோலாலம்பூர்: இந்தியா, உலகிற்கு அளித்த பரிசு தமிழ்மொழி என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ள பிரதமர் மோடி சனிக்கிழமை (பிப்ரவரி 7) கோலாலம்பூரில் மலேசிய வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார். மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
மலேசியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் குறித்தும் கடந்த வாரம் மலேசியாவில் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருநாள் தொடர்பிலும் மோடி பேசினார்.
மொழி, இலக்கியம், இரு நாடுகளின் கலாசாரத்தைப் பரிமாறிக்கொள்ளும் பாலமாக இது இருக்கிறது என்றார் அவர்.
உலகம் முழுவதும் இந்தியாவை இணைக்கும் மொழியாக தமிழ் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழ் இலக்கியங்கள் காலம் கடந்து நிலைத்து நிற்கும், தமிழ் மக்கள் தங்கள் திறமையால் மனித குலத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது.
“தமிழ்ப் பண்பாடும் திருவிழாக்களும் மலேசியாவில் பிரபலமாக உள்ளன. மலேசியாவில் மூன்று விழுக்காடு மக்கள் தமிழ் பேசுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியக் குடிமக்களுக்கு 6வது தலைமுறை வரை ஓசிஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அடையாள அட்டை விரிவுபடுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவுக்கு கல்வி கற்க வரும் மலேசிய மாணவர்களுக்கு திருவள்ளுவர் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“இந்தியாவின் நாணயம் வலுவாக இருப்பதால் நம்பிக்கை பெருகியிருக்கிறது. பிரிட்டன், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓமன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றுடன் வணிக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். இதனால் உலக அளவில் இந்தியாமீது நம்பிக்கை அதிகரித்து வருகிறது,” என்றார் பிரதமர் மோடி.

