ஜோகூர் விலங்கியல் பூங்காவில் ‘நைட் சஃபாரி’; மாநில அரசாங்கம் பரிசீலனை

ஜோகூர் விலங்கியல் பூங்காவில் ‘நைட் சஃபாரி’; மாநில அரசாங்கம் பரிசீலனை

1 mins read
818f879e-328b-4c5d-b6e5-c8b750e6898a
விலங்கியல் பூங்கா மீண்டும் இவ்வாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி திறந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500,000 மலேசிய, அனைத்துலக வருகையாளர்களைப் பெற்றுள்ளது. - படம்: ஃபேஸ்புக்
Google News Preferred Icon

இஸ்கந்தர் புத்திரி, ஜோகூர்: மேலும் அதிகமான வருகையாளர்களை ஈர்க்க, ஜோகூர் விலங்கியல் பூங்காவில் ‘நைட் சஃபாரி’ எனப்படும் இரவுநேர விலங்கியல் பூங்கா ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஜோகூர் மாநில அரசாங்கம் பரிசீலனை செய்துவருவதாக ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.

விலங்கியல் பூங்கா மீண்டும் இவ்வாண்டு திறந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500,000 மலேசிய, அனைத்துலக வருகையாளர்களை வரவேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், விலங்கியல் பூங்காவின் இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக மாநிலத்தின் 2025 வரவுசெலவுத் திட்டத்தில் 5 மில்லியன் ரிங்கிட் (S$1.51 மி.) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவதோடு நின்றுவிடாமல் கூடுதல் ஈர்ப்புத்தன்மை, நவீனம், இருவழித் தொடர்புடைய சூழல் ஆகியவற்றோடு வருகையாளர் அனுபவத்தை மெருகேற்றுவதற்காகவும் இந்த முயற்சி எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

‘நைட் சஃபாரி’ கருவை அறிமுகப்படுத்தி, விலங்கியல் தோட்டத்தை இரவு வரை திறந்துவைத்திருப்பது இந்த இரண்டாம் கட்டத்தின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகும் என்றார் அவர்.

இருப்பினும், இரவுநேர அனுபவத்தை உயர்பாதுகாப்பு அம்சங்களுடன் வருகையாளர்களுக்கு வழங்க, பாதுகாப்பான பாதை ஒன்றும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் திரு ஓன் ஹஃபிஸ்.

கடந்த மூன்றாண்டுகளாக 9.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜோகூர் விலங்கியல் பூங்கா ஆகஸ்ட் 31ஆம் தேதி மீண்டும் திறந்தது.

குறிப்புச் சொற்கள்
விலங்கியல்வருகையாளர்ரிங்கிட்ஜோகூர் பாருமலேசியாவரவுசெலவுத் திட்டம்