மலேசியாவில் முதலீடுகளை நிறுத்திவைத்துள்ள நெட்வொர்க் பள்ளி

மலேசியாவில் முதலீடுகளை நிறுத்திவைத்துள்ள நெட்வொர்க் பள்ளி

1 mins read
மலேசியாவின் தொழில்நுட்பக் கனவுக்கு ஆபத்து: நிறுவனர் பாலாஜி சீனிவாசன்
d580d242-e2fb-4419-b621-e72f06a988a5
இஸ்ரேலியர்கள் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தங்களது எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை நிறுத்தி வைப்பதாக நெட்வொர்க் பள்ளியின் நிறுவனர் பாலாஜி சீனிவாசன் அறிவித்துள்ளார். - படம்: ஃப்ரீ மலேசியா டுடே
Google News Preferred Icon

கோலாலம்பூர்: இஸ்ரேலியர் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, ‘நெட்வொர்க்’ பள்ளி நிறுவனம் தனது எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை நிறுத்திவைத்துள்ளது.

ஜோகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் இயங்கும் ‘நெட்வொர்க்’ பள்ளியில் சட்டவிரோதமாக இஸ்ரேலியர்கள் தங்கியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அங்குள்ள 266 வெளிநாட்டவர்களின் கடவுச்சீட்டுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் முறையான ஆவணங்களுடன் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அச்சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பள்ளியின் நிறுவனரும், அமெரிக்க முதலீட்டாளருமான பாலாஜி சீனிவாசன், அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கை மலேசியாவின் உலகளாவிய தொழில்நுட்ப மையக் கனவுக்குப் பெரும் ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ளார்.

ஃபாரஸ்ட் சிட்டியில் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், பல மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் தமது சமூக ஊடகப் பதிவில் அவர் தெரிவித்தார்.

திட்டமிட்டிருந்த 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான விரிவாக்கத் திட்டங்கள் உட்பட, புதிய முதலீடுகள் அனைத்தும், இதுபோன்ற சிக்கல்கள் மீண்டும் ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்படும்வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது குறித்துப் பேச பிரதமரின் அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கூகல், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள், பெரும் முதலீட்டாளர்கள் மலேசியாவில் முதலீடு செய்வதை இது யோசிக்க வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஉலகம்ஜோகூர்முதலீடுஇந்தியர்ஆபத்து