தாய்லாந்துப் பூங்காவில் 70க்கும் மேற்பட்ட புலிகள் மரணம்

தாய்லாந்துப் பூங்காவில் 70க்கும் மேற்பட்ட புலிகள் மரணம்

2 mins read
7685c324-a0db-4761-a8f5-a0ae5e04cc8a
பரவுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ள கிருமி, கடும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுத்தியதைச் சோதனைகள் காட்டின. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சியாங்மாய்: தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள தனியார் விலங்குப் பூங்காவில் அண்மைய வாரங்களில் ஏற்பட்ட மோசமான கிருமித்தொற்றால் குறைந்தது 72 புலிகள் மாண்டன.

பரவுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ள அந்தக் கிருமி கடும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுத்தியதைச் சோதனைகள் காட்டியதாக சியாங்மாயில் உள்ள மாநிலக் கால்நடை அலுவலகம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

“பூனைகள், நாய்கள் போன்ற மற்ற விலங்குகளைக் காட்டிலும், புலிகள் நோய்வாய்ப்படும்போது, அதனைக் கண்டறிவது மேலும் சிரமம். அதனால், அவை நோய்வாய்ப்பட்டிருந்ததைத் தாமதமாகத்தான் அறிந்துகொண்டோம்,” என்று தேசிய கால்நடைப் பிரிவின் இயக்குநர் உள்ளூர் ஊடகத்திடம் கூறினார்.

கருத்துக் கேட்க, ‘டைகர் கிங்டம்’ எனும் அந்தப் பூங்காவைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

அங்குச் செல்பவர்கள், புலிகளைத் தொட்டு, அவற்றுடன் படம் எடுக்க வாய்ப்புள்ளதாக அதன் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

சியாங்மாயில் உள்ள ‘மெ ரிம்’ பூங்காவிலும் ‘மே டெங்’ மாவட்டத்தில் உள்ள இரண்டாம் இடத்திலும் இந்த மாதத் தொடக்கத்திலிருந்து புலிகள் மாண்டதைத் தொடர்ந்து, உடற்கூராய்வை விரைந்து மேற்கொள்ள தேசிய கால்நடைப் பிரிவு ஏற்பாடு செய்கிறது.

‘மெ ரிம்’ பூங்கா 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. சியாங்மாய் மாநிலக் கால்நடை அலுவலகத்தைச் சேர்ந்த கால்நடை நோய் விசாரணைக் குழு, ‘மெ ரிம்’ பூங்காவிற்குச் சென்று, புலிகளின் சடலங்களிலிருந்து மாதிரிகளைச் சேகரித்தன.

இதற்கிடையே, உயிருடன் இருக்கும் எஞ்சியுள்ள புலிகள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் பராமரிக்கப்படுவதற்கும் தாதிமை நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்