மலேசியாவின் மேபேங்க் வங்கியின் வாடிக்கையாளர் திருவாட்டி ஹஃபிட்சா அப்துல்லா, ஹெச் ஆர் ஃபோரம் என்ற அமைப்பின் துணை நிறுவனரும் இயக்குநரும் ஆவார்.
ஒருநாள் அவர் தனது கணக்கை பார்த்தபோது, நம்பவே முடியாமல் தான் ஒரு கோடீஸ்வரியாகிவிட்டதை உணர்ந்தார். இது நிச்சயமாக வங்கி செய்திருக்கும் பிழை என்பதை அறிந்துகொண்டு அவர் உடனே வங்கியிடம் தெரிவித்தார்.
லாட்டரியை வென்றதுபோல இருந்தாலும் இதன் விளைவுகளை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது என்று அவர் விவரித்தார்.
வங்கி செய்த தவற்றால், மேபேங்க் அவரது கணக்கை முதலில் முடக்கியது. ஆனால் அதைப்பற்றி அவரிடம் வங்கி தெரிவிக்கவே இல்லை. தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி ஆகியவற்றின் மூலமோ வேறு எந்த வகையிலோ தனது கணக்கு முடக்கப்பட்டதை அவர் அறியவில்லை.
எனவே, அருகில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று நடந்தவற்றை விளக்கினார். அங்கு அவர் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. மேலும் தனது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவேண்டிய காலம் அது என்பதால், கணக்கு முடக்கப்பட்டது அவருக்கு பெரும் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டது.
பணம், ஒருவருக்கு எல்லா மகிழ்ச்சியையும் அள்ளித் தந்துவிடாது என்றாலும், மேபேங்க் வங்கி அவருக்கு விரக்தியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துவிட்டது.
நகைச்சுவையாகத் தோன்றினாலும், சொந்த கணக்கு முடக்கப்பட்டு, நிறுவனத்தின் கணக்கு பயன்படுத்த முடியாமல் தினசரி மேபேங்கிற்கு கடந்த மூன்று நாள்களாக சென்று வருவதே தனக்கு வாடிக்கையாகிவிட்டது என்றார் அவர்.
தொலைபேசியில் நேரடியாகப் பேசுவதற்கே நேரம் தேவைப்படும் வங்கியின் வாடிக்கையாளர் சேவை, மற்ற கிளைகளுக்கு அவரை அனுப்பியது. தான் செய்யாத தவறுக்கு அசௌகரியத்தின் உச்சத்திற்கு இந்த அனுபவம் அவரை அழைத்துச்சென்றுவிட்டது.
திருவாட்டி ஹஃபிட்சாவின் “லிங்க்ட் இன்” என்ற சமூக ஊடகப்பதிவில் வங்கியின் துணைத் தலைவரும் வாடிக்கையாளர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான ஷெய்க் முனிர் அஹமது ஒரு பதிவிட்டிருந்தார். அதில், திருவாட்டி ஹஃபிட்சா தமது தொடர்பு எண்ணை கொடுத்தால், வங்கியின் வாடிக்கையாளர் சேவைக் குழுவினர் தொடர்புகொண்டு மேற்படி உதவிகளை செய்வர் என்று இருந்தது.
இந்த சம்பவத்தைப்போலவே பலருக்கும் நிகழ்ந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
எந்த வாடிக்கையாளரின் தனிப்பட்ட விவரங்களும் வெளியிடப்படவில்லை, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது என்று வங்கி டிசம்பர் 1ல் அறிவித்துள்ளது.


