மலேசியாவிற்கு பொருளியல் ஊக்குவிப்புத் திட்டங்கள் தேவையில்லை: உலக வங்கி

மலேசியாவிற்கு பொருளியல் ஊக்குவிப்புத் திட்டங்கள் தேவையில்லை: உலக வங்கி

2 mins read
55eb7d62-f95e-4bbc-8138-919a760e12db
மலேசியாவிற்கான உலக வங்கியின் முன்னணிப் பொருளியல் நிபுணர் அபூர்வா சங்கி. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மத்திய கிழக்கு நெருக்கடிக்கு இடையில் மலேசியாவிற்குப் பொருளியல் ஊக்குவிப்புத் திட்டங்கள் தேவையில்லை என மலேசியாவிற்கான உலக வங்கியின் முன்னணிப் பொருளியல் வல்லுநர் அபூர்வா சங்கி தெரிவித்துள்ளார்.

தற்போது மலேசியாவில் பணவீக்கம் நிலையாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இப்போது பொருளியல் ஊக்குவிப்புத் திட்டங்களை வழங்குவது பணவீக்க உந்துதலை மட்டுமே அதிகரிக்கும் என்று கூறினார்.

“கொவிட்-19 நெருக்கடியின்போது நாம் கண்டது போல, பணவீக்க அச்சங்கள் வளர்ச்சி குறித்த கவலைகளாகப் பெருகினால் மட்டுமே பொருளியல் ஊக்குவிப்புத் திட்டங்கள் தேவைப்படும்,” என்றார் அவர்.

‘உச்சவரம்பை உயர்த்துதல், அடித்தளத்தை உயர்த்துதல், மலேசியாவின் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறன் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்’ என்ற தலைப்பிலான உலக வங்கியின் 2026 ஏப்ரல் மலேசியப் பொருளியல் கண்காணிப்பு அறிக்கையின் முதல் பகுதி குறித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 9) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திரு அபூர்வா இவ்வாறு கூறினார்.

மலேசியாவின் பணவீக்கம் நிலையாகவும் கட்டுக்குள் இருக்கிறது என்றும், 2026 ஜனவரியில் இது 1.6 விழுக்காடாகப் பதிவாகும் என்றும் அவர் சொன்னார்.

கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு, கொள்கை நடவடிக்கைகள், உள்நாட்டு நிலைமைகளை எடுத்துக்காட்டும் வகையில் இரவுநேரக் கொள்கை வட்டி விகிதத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றில் மலேசியாவின் பேங்க் நெகாராவின் முயற்சிகளே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பணவீக்க அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், அரசின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் இச்சூழ்நிலையைச் சமாளிக்க மக்களுக்கு உதவுகின்றன என்று திரு அபூர்வா குறிப்பிட்டார்.

நேரடி எண்ணெய் விலைகளால் மட்டுமல்லாமல், பயன்படுத்தப்படும் பிற பொருள்கள் மற்றும் சேவைகளாலும் பணவீக்க அழுத்தங்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

“அந்தத் துறையிலும் தேவையை நிர்வகிக்க வழிகள் உள்ளன. மேலும், அரசாங்கம் சில கொள்கைகளை அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அனைத்துத் தரவுகளும் ஆதாரங்களும் பணவீக்கம் தொடர்ந்து நிலையாக இருக்கும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன,” என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி தெரிவித்தது.

மத்திய கிழக்கு மோதல் போன்ற உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில், மலேசியா ஒரு வலுவான நிலையில் இருப்பதையே எதிர்பார்க்கப்படும் பணவீக்கம் சுட்டிக்காட்டுகிறது என்றும் மூன்றாண்டு மற்றும் பத்தாண்டு முறிகளின் வருவாய் குறித்த சந்தை அறிகுறிகள் குறிப்பிடுகின்றன என்றும் அவர் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்