கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய மூப்படைதல் வரைவுத்திட்ட வெள்ளை அறிக்கை இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திட்டம், 2025லிருந்து 2045ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கானது என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2048ஆம் ஆண்டுக்குள் மூப்படைந்த சமூகம் என்ற நிலையை மலேசியா அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைக் கையாள நாடு தயாராய் இருப்பதை உறுதிசெய்ய இந்த வரைவுத்திட்டம் வரையப்படுகிறது.
மத்திய அரசாங்கம், அமைச்சர்கள் நிலை, மாநில அரசாங்கங்கள் ஆகிய அனைத்து நிலைகளிலும் நடைமுறைகளை உத்திபூர்வமாக மாற்றியமைத்துக்கொள்ள வகைசெய்வது இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம் என்று மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நாசர் குறிப்பிட்டார். அதோடு, சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரிடமிருந்தும் ஆதரவு ஈட்டுவதும் இலக்கு என்றார் அவர்.
தேசிய மூப்படைதல் வரைவுத்திட்ட வெள்ளை அறிக்கை, கல்வி, திறன்கள் மற்றும் ஊழியரணி, வாழ்நாள் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று திரு அக்மல் நஸ்ருல்லா குறிப்பிட்டார்.
“தேசிய மூப்படைதல் வரைவுத்திட்டம் முக்கியமாகக் கவனம் செலுத்தும் அம்சங்கள், மூப்படையும் சமூகத்தைக் கையாள நாட்டைத் தயார்நிலையில் வைத்துக்கொள்ளும் நோக்கில் 13வது மலேசியத் திட்டத்தில் (13th Malaysia Plan) குறிப்பிட்ட உத்திகளாகவும் இயக்கங்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளன,” என்றும் அவர் தெரிவித்தார்.

