கோத்தா பாரு: பெங்கலான் சேப்பாவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையம் மார்ச் மாதம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
அதன் மூலம் அதன் பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 1.5 மில்லியனிலிருந்து நான்கு மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளுக்கான நவீன வசதி, விமானச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை போன்ற பணிகளை மேற்கொண்ட பிறகு விமான நிலையம் புதுப் பொலிவு பெற்றுள்ளதாக சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்தின் மேலாளர் சுஹைமி அப்துல் சானி தெரிவித்தார்.
மேலும், பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்கும் வகையில் முனையக் கட்டடத்தின் பரப்பளவு 12,000 சதுர மீட்டரிலிருந்து 36,000 சதுர மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
விமான நிறுத்துமிடங்களின் எண்ணிக்கையும் ஐந்திலிருந்து பதினொன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

