ஹாங்காங்: அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அனைத்துலகச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்த வார இறுதியில் பலத்த சரிவைச் சந்தித்துள்ளது.
மூன்று மாதங்களாக நீடித்துவரும் இந்த மோதலைக் கட்டுப்படுத்த, இரு நாடுகளும் 60 நாட்களுக்குத் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க சம்மதித்துள்ளதாக ‘ஆக்சியோஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், முக்கியக் கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் கப்பல் போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இந்த அமைதிச் சூழல் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் டாலருக்கான தேவை உலகளவில் குறைந்துள்ளது. இதன் விளைவாக, டாலர் குறியீடு 0.3% சரிந்து 99.02 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.
அதே நேரத்தில், டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு 0.24% உயர்ந்து $1.1652ஐ எட்டியுள்ளது. ஜப்பானிய யென் மற்றும் ஆஸ்திரேலிய டாலர் போன்ற பிற முக்கிய நாணயங்களின் மதிப்பும் வலுவடைந்துள்ளன.
அமெரிக்கா - ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்திருந்தது.
தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தம் இன்னும் உறுதி செய்யப்படவேண்டிய நிலையில் இருந்தாலும், இது உலகளாவிய வர்த்தகச் சந்தையிலும் பணவீக்கக் கட்டுப்பாட்டிலும் பெரும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

