துபாய்/வாஷிங்டன்: ஈரானின் அடுத்த தலைவரை முடிவுசெய்வதில் தமக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 5) தொலைபேசிவழி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அமெரிக்க, இஸ்ரேலியப் போர் விமானங்கள் ஈரானைத் தாக்கிவருவதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு நாடுகள்மீது ஏவுகணைகளைப் பாய்ச்சும் சூழலில் இவ்வாறு அதிபர் டிரம்ப் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மறைந்த ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மகன் மொஜ்தபா காமெனி ஈரானின் அடுத்த தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது சரியான தேர்வாக இருக்காது என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
“ஈரானை எதிர்காலத்தில் வழிநடத்தக்கூடிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் சம்பந்தப்பட விரும்புகிறோம். அதே சமயத்தில், ஈரானுக்கு எதிராகச் செயல்படும் குர்தியப் படைகளை அவர்களது தாக்குதல்களில் முன்னேறிச் செல்லும்படி ஊக்குவிக்கிறோம்,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான்மீது தாக்குதல்களைத் தொடங்கிய நாள்முதல் அமெரிக்க அரசாங்கம் குர்தியப் போராளிகளுடன் தொடர்பில் இருந்துவருகின்றது. அந்தப் படைகளுக்கு எந்த வகையில் அமெரிக்கா உதவி வருகின்றது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தொடர்ந்துவரும் போரில் இதுவரை ஈரானில் 1,230 பேர் மாண்டுவிட்டனர். லெபனானில் 123 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். மத்திய கிழக்கில் உள்ள பல நகரங்களுக்கும் விரிவடைந்துள்ள தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

