ஜெனீவா: புதிய ஹண்டா கிருமி இதுவரை ஆறு பேருக்குத் தொற்றியது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எட்டுப் பேரிடம் அந்தக் கிருமித்தொற்று இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஆறு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
“ஆண்டஸ் கிருமி (ANDV) என அடையாளம் காணப்பட்ட ஹண்டா கிருமி ஆறு பேருக்குத் தொற்றியது மருத்துவச் சோதனைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன் பாதிப்பால் மூவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
“இருப்பினும், அந்தக் கிருமியால் உலக மக்கள்தொகை பாதிக்கப்படும் அபாயம் குறைவாக உள்ளது. கிருமிப் பரவல் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அபாயநிலை குறித்து அறிவிக்கப்படும்,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹண்டா கிருமி பரவியதாகக் கூறப்படும் ‘எம்வி ஹோண்டியஸ்’ சொகுசுக் கப்பலில் பயணம் செய்தோரில் ஒரு ஜெர்மானியப் பெண் உட்பட மூவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோரில் இரண்டு சிங்கப்பூர் குடியிருப்பாளர்களும் அடங்குவர்.
நோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீர், எச்சில் அல்லது மலம் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் ஹண்டா கிருமி மனிதர்களுக்குப் பரவுவதாகக் கூறப்படுகிறது.
பரிசோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களிடையே ஹண்டா கிருமியின் ஒரே வகையான ஆண்டஸ் கிருமி கண்டறியப்பட்டது. அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடியது என்பதால் அனைத்துலக அளவில் கவலை எழுந்துள்ளது.

