ஹவானா: பத்து ஆண்டுகளில் காணப்படாத தொடர் மின்தடைகளால் கியூபா தலைநகர் ஹவானாவில் புதன்கிழமை (மே 13) மக்கள் போராட்டம் வெடித்தாலும் அது அமைதியாகவே நடந்தது என்று ராய்ட்டர்ஸ் ஊடகம் தெரிவித்தது.
நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு குப்பைகளைக் கொட்டி, அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தி “விளக்கை ஏற்றுங்கள், ஒற்றுமையான மக்களை வெல்லமுடியாது,” என்று முழங்கினர்.
எரிபொருள், எண்ணெய், டீசல் ஆகியன கியூபாவில் முற்றிலும் தீர்ந்துவிட்டதாக அந்நாட்டு எரிசக்தி, சுரங்கத் துறை அமைச்சர் அதே நாளில் அறிவித்தார்.
அமெரிக்கா கியூபாமீது விதித்த பொருளியல் தடையின் விளைவால் அத்தீவில் இது நடந்துள்ளது.
“எங்களிடம் எரிவாயு, எண்ணெய், டீசல் அறவே இல்லை. சேமிக்கப்பட்ட கையிருப்பாக எவ்வித எரிபொருளும் இல்லை,” என்று எரிசக்தி அமைச்சர் விசென்டெ டி லவோ கூறினார். தேசிய மின்வாரியமும் மிக மோசமான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தலைநகர் ஹவானாவில் இவ்வாரம் மின்தடைகள் அதிகரித்தன. ஏறத்தாழ 22 மணிநேரம் பல குடியிருப்புகளில் மின்சார விநியோகம் இல்லை.
ஏற்கெனவே உணவு, எரிபொருள், தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவிக்கும் நிலையில் மருத்துவத் துறையும் பெரிதும் பாதிப்படைந்துள்ளதால் அவர்கள் அவதியுறுகின்றனர்.

