வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய உளவுத்துறையின் (சிஐஏ) முன்னாள் மூத்த அதிகாரியான டேவிட் ரஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ரஷ்ஷின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏறத்தாழ 40 மில்லியன் அமெரிக்க டாலர் (S$51 மில்லியன்) மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ரஷ் கைது செய்யப்பட்டார்.
எஃப்பிஐ புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில், டேவிட் ரஷ் தமது வேலை வாய்ப்பு விண்ணப்பத்தில் கல்வித் தகுதி மற்றும் ராணுவப் பின்னணி குறித்து முற்றிலும் தவறான தகவல்களை வழங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது. அவர் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றதாகவும் கடற்படையில் விமானியாகப் பணியாற்றியதாகவும் பொய் கூறியுள்ளார்.
மேலும், அவர் போலியான கால அட்டவணைகளை நிரப்பியதோடு, தாம் கடற்படைப் போர்க்காலத் தயார்நிலைப் பிரிவின் உறுப்பினராக இருப்பதாகப் பொய் கூறி, 77,000 அமெரிக்க டாலர் ராணுவ விடுப்பு ஊதியத்தையும் மோசடியாகப் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்க அமைப்பில் மிக உயரிய ரகசிய விவகாரங்களையும் வகைப்படுத்தப்பட்ட ரகசியத் தகவல்களை அணுகும் உரிமையையும் கொண்டிருந்த இந்த முன்னாள் அதிகாரி, அரசாங்கப் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டின்கீழ் மே 19ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

