பெய்ஜிங்: சீனாவின் வடமாநிலமான ஷான்சியில் அமைந்துள்ள உயிர்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் நேர்ந்த வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
ஷுவோயாங் நகரில் இயங்கிவரும் அந்நிறுவனத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 7) அதிகாலை வெடிப்பு நேர்ந்ததாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
வெடிப்பைத் தொடர்ந்து, ஜியாபெங் பயோடெக்னாலஜி எனும் அந்நிறுவனத்தின் சட்டப் பேராளர் கைதுசெய்யப்பட்டார். வெடிப்பு குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சின்ஹுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மலைப் பள்ளத்தாக்கில் அந்நிறுவனம் அமைந்துள்ளது என்றும் அதிலிருந்து அடர்மஞ்சள் நிறத்தில் புகை வெளிவந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்நிறுவனத்திற்கென இணையத்தளம் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது. வெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை.
கடந்த 2025 ஜூன் மாதம் தோற்றுவிக்கப்பட்ட ஜியாபெங் பயோடெக்னாலஜி நிறுவனம் விலங்குணவு, நிலக்கரிப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் ஆகியவை தொடர்பில் ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

