பொகோட்டா: கொலம்பியாவில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிபாடுகளுக்குள்ளும் கட்டடங்களுக்குள்ளும் சிக்கியுள்ளோரை வெளியே கொண்டுவர மீட்புப் பணியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
நிலநடுக்கத்தில் 250க்கும் மேற்பட்டோர் மாண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. காலி, பெரேரா நகரங்களில் அதிகமானோர் உயிரிழந்தனர். மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
திங்கட்கிழமை காலை மணி 7.34க்கு ரிக்டர் அளவில் 7.4ஆகப் பதிவான நிலநடுக்கம், மேற்குக் கொலம்பியாவை உலுக்கியது. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா நாட்டில் அவசரநிலையை அறிவித்திருக்கிறார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான பெரேராவுக்கு அவர் சென்றிருந்தார். நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 2,600 பேர் காயமுற்றனர் என்றும் ஏறக்குறைய 200 பேரைக் காணவில்லை என்றும் அவர் கூறினார்.
அங்கு 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாய் அழிந்துவிட்டதாகவும் 8,000க்கும் அதிகமான வீடுகள் சேதமுற்றதாகவும் கொலம்பிய அதிபர் சொன்னார்.
ஏராளமான மக்கள் இரவுநேரத்தில் தெருக்களில் தங்கும் நிலைமை ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை மூடும்படி உத்தரவிட்டது. பல சாலைகளும் கடுமையாகச் சேதமுற்றன.
மின்சாரம், தண்ணீர், சுகாதாரப் பராமரிப்பு, தொலைபேசிச் சேவை முதலியவை பல இடங்களில் பாதிக்கப்பட்டன.


