சீன நிலச்சரிவு: முக்கிய யுனெஸ்கோ மரபுடைமைத் தளங்கள் மூடப்பட்டன

சீன நிலச்சரிவு: முக்கிய யுனெஸ்கோ மரபுடைமைத் தளங்கள் மூடப்பட்டன

1 mins read
cbc5168d-4de1-4a98-bf0f-f6169814de30
சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் உள்ள புனிங் நகரில் ‘நௌல்’ சூறாவளி காரணமாகப் பெய்த கனமழையை அடுத்து, வெள்ளநீரில் பகுதியளவு மூழ்கிய கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலமான ஜியுஷைகூ பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டது.

அதனையடுத்து, அங்குச் சிக்கியிருந்த சுற்றுப்பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ‘நௌல்’ சூறாவளி காரணமாகச் சீனாவின் தெற்கு, மத்தியப் பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்தது.

இதனால், ஜியாங்சி, ஹுனான், குவாங்டாங், சிச்சுவான், ஷாங்ஸி, கன்சு, சின்ஜியாங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்துச் சீன நீர்வள அமைச்சும் வானிலை நிர்வாகமும் எச்சரித்துள்ளன.

நீர்நிலைகள், பனி படர்ந்த மலைச்சிகரங்கள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்ற ஜியுஷைகூ சுற்றுலாத் தலத்தின் சில முக்கியப் பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

ரைஸ் பள்ளத்தாக்கில் உள்ள அம்ப மூங்கில் ஏரிப் பகுதி, செசாவா பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்குச் சுற்றுப் பயணிகள் செல்ல தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாங்சிங் நகரில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவில் 11 பேர் மாண்டனர்; 50 பேரைக் காணவில்லை.

கன்சு மாநிலத்தின் டான்சாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் பலியாயினர். கன்சுவின் வெய்யுவான் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பத்து சுற்றுப்பயணிகள் மாண்டனர்; 23 பேர் காயமடைந்தனர்.

மேலும், ஷான்சி மாநிலத்தில் மண் சரிந்து வீடு ஒன்று புதையுண்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்