படகு மூழ்கியது: மலேசியக் கடல்நீரில் 14 இந்தோனீசியரைத் தேடும் பணி தீவிரம்

படகு மூழ்கியது: மலேசியக் கடல்நீரில் 14 இந்தோனீசியரைத் தேடும் பணி தீவிரம்

1 mins read
97560f42-a397-4cb6-86d1-1f9830e9e0f6
பயணம் செய்த 37 பேரில் 23 பேர் மீட்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. - படம்: என்எஸ்டி

கோலாலம்பூர்: மலேசியாவின் மேற்குக் கடலோரம் படகு ஒன்று கவிழ்ந்ததில் மாயமான 14 பேரைத் தேடி, மீட்கும் பணியைக் கடல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஆவணமற்ற இந்தோனீசியர்கள் என்று நம்பப்படுகிறது.

பாங்கோர் தீவின் கடற்பரப்பில் சிலர் மிதந்துகொண்டிருப்பதாக திங்கட்கிழமை (மே 11) அதிகாலை மீனவர் ஒருவர் தகவல் அளித்ததாக பேராக் மாநிலக் கடல்துறை இயக்குநர் முகம்மது ஷுக்ரி கோத்தோப் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உள்ளூர் மீன்பிடிக் கப்பல் ஒன்று விரைந்து சென்று ஏழு பெண்கள் உள்ளிட்ட 23 இந்தோனீசியர்களை மீட்டது.

ஆவணங்களைப் பரிசோதிக்க, படகுத்துறை காவல் பிரிவினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக முகம்மது ஷுக்ரி கூறினார்.

படகில் 37 பேர் பயணம் செய்ததாகக் கூறப்பட்டதால், எஞ்சிய 14 பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

மலேசியாவின் பல்வேறு பகுதிகளைச் சென்றடையும் நோக்கில், மே 9ஆம் தேதி இந்தோனீசியாவின் கிசாரன் என்னும் பகுதியிலிருந்து அந்த 37 பேரும் புறப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்