வழக்கத்திற்கு மாறாக குழந்தைக்கு சினைப்பை புற்றுநோய்

வழக்கத்திற்கு மாறாக குழந்தைக்கு சினைப்பை புற்றுநோய்

2 mins read
94bf19dd-3d61-4c2c-ae08-858492f5dbab
இரண்டு வயதுகூட ஆகாத குழந்தைக்குச் சினைப்பை புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. - படம்: ஃபேஸ்புக்
Google News Preferred Icon

மலேசியாவைச் சேர்ந்த 19 மாத குழந்தை ஒன்றுக்குச் சினைப்பை புற்றுநோய் (ovarian cancer) இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தப் புற்றுநோய் வயதில் சற்று முதிர்ந்த பெண்களிடையே கண்டறியப்படுவது வழக்கம்.

தமது குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டதுடன் உப்பிய வயிறும் உண்டானதை அடுத்து பிரச்சினை ஏதோ உள்ளது என்று ஆகஸ்ட் மாதம் குழந்தையின் தாயார் திருவாட்டி ஃபல்லரிஸ்டியா சின்டோம் சந்தேகித்தார்.

எப்போதும் உள்ள சுறுசுறுப்பு, தனின் அவுனி ரிக்சி என்ற அந்த குழந்தையிடம் குறைந்திருந்தது. அத்துடன் எந்நேரமும் தன்னைத் தூக்கி வைத்துக்கொள்ளவும் குழந்தை அதன் தாயிடம் கேட்டது.

“என் குழந்தை ஒருவகை அசௌகரியத்தை உணர்ந்தார். இந்தச் சிறு வயதில் பேச முடியாததால் வலி வரும்போதெல்லாம் அவரால் அழ மட்டுமே முடிந்தது,” என்று ‘சினார் டெய்லி’ மலேசிய செய்தி ஊடகத்திடம் திருவாட்டி ஃபல்லரிஸ்டியா குறிப்பிட்டார்.

சாபா மாநிலத்தில் வசிக்கும் இந்தக் குடும்பம், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை நாடினர். ஆனால், ரத்த எண்ணிக்கை அதிகளவு குறைந்ததை அடுத்து நிபுணத்துவ மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் குழந்தை மாற்றப்பட்டது.

அங்குள்ள மருத்துவர்கள் பின்னர் 13.5 சென்டிமீட்டர் நீளத்தில் கட்டி ஒன்றைக் கண்டுபிடித்தனர். அக்டோபர் 2ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்த பிறகு, குழந்தைக்கு ‘ஸ்டேஜ் 3’ (Stage 3) சினைப்பை புற்றுநோய் இருப்பதை அவர்கள் உறுதிசெய்தனர். இதன்படி, ஒன்று அல்லது இரண்டு சினைப்பைகளிலிருந்து புற்றுநோய் மற்றப் பகுதிகளுக்குப் பரவி இருக்கலாம்.

குழந்தைக்கு நான்கு வயது அண்ணன் ஒருவரும் உள்ளார். அவருக்கு ‘ஆட்டிசம்’ எனும் மதியிறுக்கம் இருக்கிறது.

இந்நிலையில், அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்த பிறகு குழந்தை ‘கீமோதெரபி’யைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
புற்றுநோய்குழந்தைஅறுவை சிகிச்சைசிகிச்சை