பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் மகளான நூருல் இஸா அன்வார், மக்கள் நீதிக் கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கல்வி பயில்வதற்காகத் திருவாட்டி நுருல் இஸா அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளக் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“மேற்படிப்பை மேற்கொள்ள நான் தயாராகும் வேளையில் நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது. இந்த முடிவு, சேவையாற்றுவதுடனும் பங்காற்றுவதுடனும் தொடர்புடையதாகும். இதற்கும் அரசியல் உலகுக்கும் தொடர்பில்லை,” என்று அவர் விவரித்தார்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர், “பிகேஆர் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளும் எனது முடிவை ஏற்றுக்கொண்டதற்குக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் கட்சித் தலைமைத்துவத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் பிகேஆர் உறுப்பினராகத் தொடரப்போவதாகவும் மேம்படுத்தப்பட்ட மலேசியாவை உருவாக்கட்ஹ் திரு அன்வாரின்கீழ் செயல்படும் கட்சித் தலைமைத்துவத்தின் போராட்டத்துக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப்போவதாகவும் திருவாட்டி நுருல் இஸா கூறினார். திரு அன்வாரின் மூத்த பிள்ளையான அவர், தம்முடன் துணைநின்ற பிகேஆர் உறுப்பினர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.


